Saturday 21 October 2017

Meaning of Kanthar Sashti Kavasam_கந்தர் சஷ்டி கவசம் - பொருள் விளக்கம்




 பகுதி 1

நேரிசை வெண்பா
"துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்

பதிப்போர்க்குச் செல்வம் பலித்து கதித்தோங்கும்

நிஷ்டையும் கைகூடும் நிமலர் அருள் கந்தர்

சஷ்டி கவசந்தனை"

"இந்த வெண்பாவை உரைநடையாகச் சொல்வதென்றால்"

"நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசம் தனைத் துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம் போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்; நிஷ்டையும் கைகூடும்"

முதல் சொல்லான நிமலர் யாரைக் குறிக்கிறது?"

"கந்தர் என்பது முருகப்பெருமானின் திருப்பெயர் என்று தெரியும். அந்த கந்தனை அருளும் நிமலர் என்பதால் அங்கே முருகப்பெருமானைத் தோற்றுவித்த சிவபெருமானை குறிக்கிறது.

மலர் என்ற வடசொல் குற்றம் என்ற பொருளைத் தரும். நிமலர் என்றால் குற்றமற்றவர், குறையொன்றுமில்லாதவர் என்று பொருள் தரும். இங்கே அது சிவபரம்பொருளைக் குறித்து நிற்கிறது.

கந்தன் என்ற திருப்பெயருக்கும் பொருள் விளக்கம் உண்டு. சங்க காலத்தில் கந்து என்ற உருவில் இறைவனை வழிபட்டார்கள். அதிலிருந்து கந்தன் என்ற திருப்பெயர் வந்ததாகக் கொள்ளலாம். ஸ்கந்தன் என்ற வடசொல் தமிழில் கந்தன் என்று வழங்கப்படுகிறது என்று பெரும்பான்மையோர் எடுத்துக் கொள்ளும் பொருளில் பார்த்தால் கந்தன் என்பதற்கு இணைக்கப்பட்டவன் என்று பொருள்"

"ஆறு குழந்தைகளாக சரவணப் பொய்கைக் கரையில் விளையாடிக் கொண்டிருந்தவனை உமையன்னை வாரி அணைத்த போது ஆறுருவும் ஓருருவாக இணைந்ததால் ஆறுமுகனுக்கு ஸ்கந்தன் என்ற பெயர் வந்ததாக கந்த புராணமும் பிற நூல்களும் கூறுகின்றன."

"கந்தம் என்றால் நறுமணம், சந்தனம் என்றெல்லாம் கூட பொருள் உண்டல்லவா? நறுமணம் மிக்கவன், சந்தனக் குழம்பைப் பூசியவன் என்ற பொருள்களை எல்லாம் கூட இந்தப் பெயருக்குச் சொல்லலாம் அல்லவா?"

"ஆமாம். சொல்லலாம். ஆனால் அவை முதன்மைப் பொருள்கள் இல்லை"

"நிமலரான சிவபெருமான் அருளும் கந்தனாகிய முருகப்பெருமான் மேல் இயற்றப்பட்ட சஷ்டி கவசம் என்ற நூல் இந்த நூல்.

உடலைக் காக்க அணிவது கவசம். இந்த நூலும் உடலைக் காக்க இறையருளை வேண்டுவதால் இந்த நூலுக்கும் கவசம் என்ற பெயர் வந்தது.

ஓவ்வொரு நாளும் இந்த கவசத்தைச் சொல்லி உகந்து திருநீறு அணியலாம். சஷ்டி திதியில் ஓதினால் இன்னும் பலமடங்கு பயன் உண்டு. அதனால் இதற்கு சஷ்டி திதியில் சொல்லும் கவசம் என்ற பொருளில் சஷ்டி கவசம் என்ற பெயர் வந்தது"

"இந்த கந்தர் சஷ்டி கவசத்தை துதிப்போர்க்கும் நெஞ்சில் பதிப்போர்க்கும் என்ன என்ன பயன் விளையும் என்பதை மற்ற அடிகள் சொல்கின்றன.

துதிப்போர்க்கு வலிய வினைகள் போகும். பல பிறவிகளாகச் செய்த செயல்களின் பயன்களை இப்பிறவியிலும் இனி வரும் பிறவிகளிலும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தீவினைகள் துன்பமாகவும் நல்வினைகள் இன்பமாகவும் மாறி மாறிப் பயன் தந்து கொண்டிருக்கின்றன.

இந்நூலைத் துதிப்போர்க்கு தீவினைப் பயன்களான துன்பங்கள் போகும் என்பதை வல்வினை போம் துன்பம் போம் என்று தெளிவாக எடுத்துச் சொல்கிறார் தேவராய சுவாமிகள்.

மீண்டும் மீண்டும் துதித்து இப்பனுவலை நெஞ்சில் பதிப்போர்க்கு நல்வினைப் பயன்களான இன்பமும் செல்வமும் பலித்து பயன் தந்து ஆல் போல் தழைத்து அருகு போல் வேர் ஊன்றி பல தலைமுறைகளாக ஓங்கி நிற்கும்.

இங்கே செல்வம் என்று சொன்னது இம்மையில் வேண்டும் பொருட்செல்வம் மட்டும் இல்லை; மறுமைக்கு வேண்டிய அருட்செல்வமும் தான்.

அந்த அருட்செல்வம் பலித்து கதித்து ஓங்கும் ஒரு வழி இறைவன் திருவடிகளிலேயே மனம் நின்று கிடைக்கும் ஆழ்ந்த நிஷ்டை தான். நெஞ்சில் பதிப்பவர்களுக்கு அந்த நிஷ்டையும் எளிதாகக் கை கூடும்"

"இம்மை மறுமைப் பயன்களை அனைத்தும் தரும் பனுவலாக சஷ்டி கவசம் இருக்கிறது. மனம், மொழி, மெய்யாலே உந்தனைத் துதிக்க என்று அருளாளர்கள் சொன்னதை போல் இப்பனுவலை ஓதினால் இப்பயன்கள் எல்லாமே கிட்டும்"

"நுண்ணிய பொருள்: மனம், மொழி, மெய் என்னும் மூன்று கரணங்களையும் இந்த வெண்பாவில் குறிக்கிறார் சுவாமிகள்.



துதிப்பது வாயால் செய்யும் செயல். அங்கே மொழியைக் குறித்தார்.



நெஞ்சில் பதிப்பது மனத்தால் செய்யும் செயல்.



அனைத்துப் புலன்களையும் அடக்கி நிஷ்டையில் அமர்வது உடலால் செய்யும் செயல். அங்கே மெய்யைக் குறித்தார்.



ஆக மனம், மொழி, மெய் என்னும் முக்கரணங்களாலும் ஒன்றி வழிபட இப்பயன்கள் கிட்டும் என்பது சுவாமிகள் சொல்லும் செய்தி"

"இதற்கு மேலும் ஆழ்ந்த பொருள் இருக்கலாம் அதனை இறையருளில் ஆழங்காட்பட்டவர்களிடம் கேட்டு உணர்ந்து கொள்ள வேண்டும்"


குறள் வெண்பா
"அமரர் இடர் தீர அமரம் புரிந்த

குமரன் அடி நெஞ்சே குறி"

தேவர் துன்பம் தீர போர் புரிந்த குமரனடி வணங்குவோம்.


பகுதி 2

சஷ்டியை நோக்க சரவண பவனார்

சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்

பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாட கிண்கிணி ஆட

மையல் நடம் செய்யும் மயில்வாகனனார்

கையில் வேலால் எனை காக்கவென்று வந்து

"வேலும் மயிலும் துணை"

முருகப்பெருமானின் முதன்மை அடையாளங்கள் வேலும் மயிலும். இரண்டையும் இந்தப் பகுதியில், நூலின் தொடக்கமான இந்த அடிகளில் குறித்துவிடுகிறார் அடிகளார்.

அடியாரைக் காக்க வேகமாக முந்துவது சேந்தனின் திருக்கைவேல். அடியாருக்கு அருள அழைத்து வருவது மயில். வேலும் மயிலுமே அடியவர்களுக்குத் துணை"

குமரன் அடி நெஞ்சே குறிஎன்று இதற்கு முந்தைய குறள் வெண்பாவில் சொன்னார் அல்லவா? அதன் தொடர்ச்சியாக இந்தப் பகுதியில் முருகனின் வரவை நெஞ்சில் குறிப்பதைப் போல் தோன்றுகிறது இந்த பகுதி

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

என்ற குறட்பாவினைப் போல்.

எப்படி கற்கஎன்று முதலில் அந்த குறளில் வந்ததோ அதைப் போல் இங்கே சஷ்டியை நோக்கஎன்று வந்தது. இங்கே சஷ்டி என்பது சஷ்டி திதியில் பாடப்படும் இந்த நூலாகிய சஷ்டி கவசத்தைக் குறிக்கும்.

வாழ்வில் என்ன செய்ய வேண்டும்என்ற கேள்விக்கு விடை சொல்வதைப் போல் குறளாசான் கற்கஎன்ற கட்டளையை இட்டார். அதே கேள்விக்கு இன்னொரு பதிலைப் போல் தேவராய சுவாமிகள் சஷ்டியை நோக்கஎன்ற கட்டளையை இடுகிறார்.

நெஞ்சே குறிஎன்று முன்னர் தனது நெஞ்சுக்குச் சொன்னதால் இங்கேயும் இந்த கட்டளை மற்றவர்களுக்கு இல்லை; இந்த நூலைப் பயில்பவர் ஓதுபவர் அனைவரும் தத்தமது நெஞ்சுக்கே இடும் கட்டளை என்று கொள்ள வேண்டும்

"'என்ன செய்ய வேண்டும்' என்று குறளாசான் சொல்லிவிட்டு 'எப்படி அதைச் செய்ய வேண்டும்' என்ற கேள்விக்கும் விடை சொல்கிறார். அதே போல் இங்கேயும் தேவராய சுவாமிகள் சொல்கிறார்."

"நெஞ்சுக்குச் சொல்லுவதாக... 'நெஞ்சே! முருகப்பெருமான் என்னைக் காக்கவென்று வருகிறான் என்பதை நினைவில் நிறுத்திக் கொண்டு சஷ்டி கவசமாகிய இந்த நூலை ஓது' என்று சஷ்டி கவசத்தை எப்படி ஓத வேண்டும் என்றும் சொல்கிறார்"

"மற்ற வரிகளுக்குப் பொருள்"

சரவணப் பொய்கையில் உதித்ததால் முருகப்பெருமானுக்கு சரவணபவன் என்ற திருப்பெயர் இருப்பது தெரிந்திருக்கும். அந்த சரவணபவனார் சிஷ்டருக்கு உதவுபவன். சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்.

சிஷ்டர் என்றால் அடியவர். சிரேஷ்டர் என்ற வடசொல்லுக்குச் சிறந்தவர், அடியவர் என்று பொருள். அது சிஷ்டர் என்று சிதைந்து பேச்சுவழக்கில் புழங்கும். அடியவர்கள், சிறந்தவர்கள், ஆசிரியர்கள் இவர்களின் வாழ்வுமுறையை, ஆசாரத்தைச் சிஷ்டாசாரம் என்று குறிப்பதும் வழக்கத்தில் இருக்கிறது.

அடியவர்களுக்கு உதவுவது செங்கதிர் வேல். அதனை கையில் ஏந்தியவன் வேலோன்.

அடியவர்களுக்கு உதவுபவன் செங்கதிர் வேலோனாகிய முருகன்.

சிவந்த ஒளியை வீசுவது வேல் என்று கொண்டால் செங்கதிர் என்பது வேலைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். முருகனுக்கு செவ்வேள், சேந்தன் என்ற திருப்பெயர்களும் இருப்பதால் சிவந்த ஒளியை வீசுபவன் திருமுருகன் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

'அடி நெஞ்சே குறி' என்று திருவடிகளை மனத்தில் நிறுத்தும் படி முன்னர் சொன்னதின் தொடர்ச்சியைப் போல் இங்கும் திருப்பாதங்களைச் சொல்கிறார்.

"பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட"

திருப்பாதங்கள் இரண்டிலும் பல அரிய இரத்தின மணிகள் பூட்டிய சதங்கை இசைப்பாடல் பாட.

"கிண்கிணி ஆட"

கிண்கிணி என்பது திருப்பாதங்களில் இருக்கும் இன்னொரு ஆபரணம். மாணிக்கப்பரல்கள் இட்டு இனிய ஓசை எழுப்பும் தண்டை. அதுவும் ஆட.

"மையல் நடம் செய்யும் மயில்வாகனனார்"

பார்ப்பவர் உள்ளங்களைக் கொள்ளைக் கொள்ளும் நடனத்தை ஆடும் திருமுருகன். அவன் மயிலை வாகனமாக கொண்டிருப்பதால் அவன் மயில்வாகனன்.

இப்படி சதங்கை கீதம் பாடவும் கிண்கிணி ஆடவும் மையல் நடம் செய்பவன் திருமுருகன் என்று பொருள் கொண்டால் அவன் ஆடிக் கொண்டு வரும் அழகான தோற்றத்தைத் தியானிக்கலாம்.

சதங்கை பாடவும் கிண்கிணி ஆடவும் மையல் நடஞ்செய்வது மயில் என்று பொருள் கொண்டால் ஆடிவரும் மயிலில் மயில்வாகனன் ஏறிவருவதை தியானிக்கலாம்.

சிஷ்டரைக் காக்கும் அதே திருவேலைக் கையில் ஏந்தி அடியவர்களின் ஒருவனான என்னைக் காக்க முருகன் வருகிறான் என்று எண்ணி சஷ்டி கவசத்தை ஓத வேண்டும்"

சஷ்டியை நோக்க சரவணபவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட
கிண்கிணி ஆட
மையல் நடம் செயும் மயில் வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்க என்று வந்தான்
(என்று மனத்தில் குறித்து சஷ்டி கவசத்தை ஓத வேண்டும்)
 
பகுதி 3

முருகனை வரவேற்கும் வரிகள்

"வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹணபவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர ஹணப வருக வருக
அசுரர் குடி கெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
விரைந்தெனை காக்க வேலோன் வருக

"இந்தப் பகுதியில் இரண்டு இரண்டு அடிகளாகவோ அல்லது நான்கு நான்கு அடிகளாகவோ எடுத்துக் கொண்டு பொருள் சொல்லும் வகையில் வரிகள் அமைந்திருக்கின்றன"

"வடிவேலும் மயிலும் துணை என்பதை மீண்டும் வலியுறுத்துவதைப் போல வேலாயுதனார் என்றும் மயிலோன் என்றும் முருகனை முதல் இரு அடிகள் விளிக்கின்றன"

வர வர என்பதும் வருக வருக என்பதும் ஒருவரை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் போது புழங்கும் அடுக்குத் தொடர்கள்.

வேல் என்னும் ஆயுதத்தை அடியாரைக் காக்கும் பொருட்டு ஏந்தியிருப்பதால் முருகனை வேலாயுதனார் என்று அழைத்தார் அடிகளார்.

அவன் ஆடி வரும் மயில் மேல் ஏறி வருவதால் மயிலோன் என்றார்.

வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக"

"அடுத்த இரு வரிகளில் இந்திரன் முருகப்பெருமானைப் போற்றுவதைக் குறிக்கிறார்"

"இந்திரன் மட்டும் இல்லை. இந்திரனைத் தலைவனாகக் கொண்ட தேவர்களும் அவர்கள் காக்கும் திசைகளில் இருக்கும் அனைத்து உயிர்களும் போற்றிப் புகழ வடிவேலவன் வருவதைக் கூறுகிறார்.

கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு என்னும் எட்டுத் திசைகளிலும் இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும் எட்டுத் திசைக் காவலர்கள் இருந்து அனைத்து உயிர்களையும் காப்பதாக முன்னோர் நூல்கள் சொல்லும். இவர்களை அஷ்டதிக்பாலகர் என்று வடனூல்கள் அழைக்கும்.

அப்படி இந்திரன் முதலாக உள்ள எண் திசைக் காவலர்களும் அவர்களால் காக்கப்படும் உயிர்களும் போற்றிக் கொண்டாட மந்திர வடிவேல் ஏந்தியவன் வருக வருக"

"மந்திர வடிவேல் என்று தானே சொல்கிறார். ஏந்தியவன் என்பதை இங்கே நாமாக எடுத்துக் கொள்ளலாமா?"

"உடைமையின் பெயரை உரியவர் மேல் ஏற்றிக் கூறுவது உலக வழக்கு என்பதால் இங்கே வேலவனைக் குறித்ததாக எடுத்துக் கொள்ளலாம். வேலை வரவேற்பதாக எடுத்துக் கொண்டாலும் பொருள் பொருத்தமாகத் தான் இருக்கும்"

மந்திர வடிவேல் என்பதற்கு என்ன பொருள்?"

"மந்திரங்களில் முதன்மையானது ஓங்கார மந்திரம். ஓங்காரமே வேல்வடிவாய் அமைந்ததால் மந்திரமே வடிவான வேல் என்று பொருள் கொள்ளலாம் அல்லது அழகே வடிவான வேல் என்றும் பொருள் கொள்ளலாம்"

இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக.

அடுத்த அடிகளுக்கான பொருள்.

"ஞான சக்தி வடிவான முருகப்பெருமானின் இருபுறமும் வீற்றிருக்கும் இச்சா சக்தி, கிரியா சக்திகளான திருத்தேவியர் இருவரையும் அடுத்த வரிகளில் நினைத்து அவர்களையும் முருகனுடன் சேர்ந்து வரவேற்கிறார் அடிகளார்.

உலகச் செல்வங்கள் அனைத்திற்கும் தலைவர்களாக எட்டு வசுக்கள் என்னும் தேவர்களைச் சொல்லுவார்கள். அந்த எட்டு வசுக்களின் தலைவன் இந்திரன். அதனால் அவனுக்கு வாசவன் என்று ஒரு பெயர் உண்டு. அவன் மகளாகிய தெய்வயானைப் பிராட்டியாரை மணம் புரிந்தவன் என்பதால் முருகனை வாசவன் மருகாஎன்று விளித்து வரவேற்கிறார்.

குறவர் குலமகளாகிய வள்ளிப் பிராட்டியாரின் நெஞ்சம் நிறை நேசத்தை என்றும் மறவாமல் நினைத்துக் கொண்டே இருப்பதால் 'நேசக் குறமகள் நினைவோன்' என்றார்.

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக"

அடுத்த அடிகளுக்கான பொருள்.

"ஆறுமுகம் கொண்ட ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக

ஆறு திருமுகங்களைக் கொண்ட ஐயனே வருக. திருநீற்றை நெற்றியிலும் உடம்பிலும் அணிந்திடும் வேலவன் தினந்தோறும் வருக.

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹணபவனார் சடுதியில் வருக

சிரம் என்றால் தலை; சென்னி என்றாலும் தலை. சென்னிமலையில் மேல் அமர்ந்திருக்கும் வேலவன் சீக்கிரம் வருக. சரவணப்பொய்கையில் உதித்த சரவணபவன் விரைவில் வருக.

சரஹணபவ என்பது ஷடாக்ஷரம் என்னும் ஆறெழுத்து மந்திரம். அதன் எழுத்துகளை சிறிதே முன்னும் பின்னுமாக மாற்றி உருவேற்றினால் வெவ்வேறு பயன்கள் கிடைக்கும் என்பார்கள் மந்திர நூலோர். அப்படி வெவ்வேறு உருவில் அமையும் ஆறெழுத்து மந்திரங்களையே மந்திர நூலாகிய இந்த நூலின் அடுத்த அடிகளில் அமைத்திருக்கிறார் அடிகளார். அவற்றின் பொருளினை குரு மூலமாக அறிந்து கொள்வதே நலம்.

அடுத்த அடிகளுக்கான பொருள்.

ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர ஹணப வருக வருக
அசுரர் குடி கெடுத்த ஐயா வருக

கெட்டதை இல்லாமல் ஆக்க அதனை அழிக்கலாம்; அல்லது திருத்தி ஆட்கொள்ளலாம். கருணைக் கடலாகிய கந்தன் சூரனின் அசுரர் குடி முழுவதையும் திருத்தி ஆட்கொண்டதால் அசுரர் குடி கெடுத்த ஐயா என்றார்

"என்னை ஆளும் சிவகுமரர்களில் இளையவனான ஐயன் தனது பன்னிரண்டு திருக்கைகளிலும் பன்னிரண்டு ஆயுதங்களையும் பாச அங்குசங்களையும் ஏந்தி அழகாக பரந்து இருக்கும் பன்னிரண்டு திருக்கண்களும் அழகுடன் திகழ விரைவாக எனைக் காக்க வருக.

என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக"

பகுதி 4

"பன்னிரு திருக்கண்களும் அழகுடன் விளங்க பன்னிரு திருக்கைகளிலும் பன்னிரு படைக்கலன்களை ஏந்தி விரைந்து என்னை காக்க வரும் என்னை ஆளும் இளையவன். என்ன ஒரு அழகான திருத்தோற்றம்?!


பன்னிரு திருக்கரங்களிலும் ஏந்தியிருக்கும் ஆயுதங்களைப் பற்றி சுவாமிகள் கூறுகிறார்.

"அறுபடைவீட்டுக் கவசங்களில் ஐந்தாவது சஷ்டி கவசமாகிய குன்று தோறாடும் குமரனைப் போற்றும் கவசத்தில் சுவாமிகள் இந்த ஆயுதங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்.

வேலாயுதம், சூலாயுதம், சங்கு, சக்கராயுதம், வில், அம்பு, வாள், மழு, குடை, தண்டாயுதம், சந்திராயுதம், வல்லாயுதம் என்னும் பன்னிரு ஆயுதங்களையும் முருகன் தனது திருக்கரங்களில் ஏந்தியிருப்பதாகச் சொல்கிறார்"
 
அடுத்த அடிகளுக்கான பொருள்.

ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளியையும்
நிலை பெற்று என் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் தீயும் தனியொளி ஒவ்வும்
குண்டலியாம் சிவ குகன் தினம் வருக"

இந்த பகுதி முழுவதும் மந்திரங்களைப் பற்றி கூறும் பகுதி.

ஐம், க்லீம், சௌம் என்னும் மந்திர ஒலிகளைப் பற்றியும் ஓம்காரத்தைப் பற்றியும் சுவாமிகள் கூறுகிறார்.

ஐம், க்லீம், சௌம் என்பவை பீஜாக்ஷரங்கள் என்று வடமொழியில் கூறுவார்கள். மந்திரங்களின் வித்தாக விளங்கும் ஒலிகள். இம்மூன்றிலும் ஐம் என்பதை உயிர் என்றே குறிக்கும் வழக்கமும் இருக்கிறது.

ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்.

ஐம் க்லீம் சௌம் என்று முறையே சொல்லும் மந்திரமும்.

உய் ஒளி சௌவும் உயிரையும் கிலியும்.

உய்வதற்கு வழி தரும் ஒளி மிகுந்த சௌம் ஐம் க்லீம் என்ற வகையில் சொல்லும் மந்திரமும்.

கிலியும் சௌவும் கிளர் ஒளி ஐயும்.

ஒளி கூடி விளங்கும் க்லீம் சௌம் ஐம் என்ற வகையில் சொல்லும் மந்திரமும்.

நிலை பெற்று என் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் தீயும்.

தினமும் என் முன்னே ஒளியுடன் திகழும் ஆறுமுகங்கள் கொண்ட தீயைப் போன்றவனும்.

தனி ஒளி ஒவ்வும்.

தனித்து ஒளிவீசும் ஓம்காரமும்.

குண்டலியாம் சிவ குகன் தினம் வருக.

மூலாதாரம் என்னும் சக்கரத்தில் வீற்றிருக்கும் குண்டலினி சக்தியின் வடிவமாகிய சிவகுமாரன் குகன் தினந்தோறும் வருக"


"மந்திரங்களின் பொருளை குருவிடம் கேட்டு உணர்ந்து ஓதுவதே முன்னோர் வகுத்த முறை. இவை மந்திரங்கள் என்று மட்டும் உணர்ந்து கொண்டு சஷ்டி கவசம் ஓதும் போது இவ்வரிகளைச் சொல்லி வந்தால் போதும். அவற்றின் பயன் கிடைக்கும்.


பகுதி 5

"ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத்து அழகிய மார்பில்
பல்பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகு உடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடர் ஒளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணை முழந்தாளும்
திருவடி அதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து"

நீண்ட பகுதியாக இருந்தாலும் எளிதான பொருள் உடைய பகுதி.

முருகப்பெருமானின் திருவுருவ வருணனை கூறி அவன் திருவடிகளில் சிலம்பொலி முழங்க விரைந்து மயில் மீது எனைக் காக்க வரவேண்டும் என்று வேண்டும் பகுதி.

ஆறுமுகமும் அணிமுடி ஆறும்.

ஆறுமுகங்களும் அழகுடன் கூடி திருமுடிகளில் அணிகின்ற கீரிடங்கள் ஆறும்.

நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும்.

திருநீறிடும் ஆறு நெற்றிகளும் நீண்ட புருவங்களும்.

பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்.

பன்னிரண்டு திருக்கண்களும் பவளம் போல் சிவந்த திருவாய்களும்.

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்.

நல்ல நெறி காட்டும் ஆறு திருநெற்றிகளிலும் நவரத்தினங்களால் செய்யப்பட்ட சுட்டி என்னும் அணிகலனும்.

ஈராறு செவியில் இலகு குண்டலமும்.

பன்னிரண்டு திருச்செவிகளிலும் திகழ்கின்ற குண்டலங்களும்.

ஆறிரு திண்புயத்து அழகிய மார்பில்
பல்பூஷணமும் பதக்கமும் தரித்து.

வலிமையான பன்னிரண்டு தோள்களுடன் கூடிய அழகிய திருமார்பில் பலவகையான அணிகலன்களையும் பதக்கங்களையும் அணிந்து.

நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்.

நல்ல மாணிக்கங்களை உடைய நவரத்தின மாலையும் (அணிந்து).

முப்புரி நூலும் முத்தணி மார்பும்.

மூன்று பிரிவுகளை உடைய பூணூலும் முத்து மாலையும் அணியும் மார்பும்.

செப்பு அழகு உடைய திருவயிறு உந்தியும்.

தனியாக புகழும் படி அழகு கொண்டு விளங்கும் திருவயிறுகளும் திருவுந்திகளும்.

துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்.

அசையும் இடையில் சுடர்வீசும் ஒளிகொண்ட பட்டாடையும்.

நவரத்னம் பதித்த நற்சீராவும்.

நவரத்தினங்கள் பதித்த நல்ல கவசமும்.

இருதொடை அழகும் இணை முழந்தாளும் திருவடி அதனில் சிலம்பொலி முழங்க.

இரு அழகிய தொடைகளும் இணையாக இருக்கும் முழந்தாள்களும் (கொண்டு), திருவடிகளில் அணிந்த சிலம்பில் இருந்து எழும் ஒலி முழங்க.

செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

சிலம்பொலி இப்படி எல்லாம் ஒலியெழுப்ப விரைந்து.

விந்து விந்து மயிலோன் விந்து.

உலகங்களுக்கெல்லாம் வித்தாக இருக்கும் மயிலோன்.

முந்து முந்து முருகவேள் முந்து.

விரைந்து விரைந்து முருகவேள் (எனைக் காக்க) விரைந்து (வருக)"

சிலம்பொலி முழங்க மயிலோன் வருவதை இங்கே ஒலிக்குறிப்புகளால் சொல்லியிருக்கிறார் சுவாமிகள். அவையும் மந்திர மொழிகள் என்றும் அவற்றை குருமுகமாக பொருள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் பெரியோர்கள் சொல்லுவார்கள்.

பாமரர்களாகிய நம்மேல் கொண்ட கருணையால் இப்படி மந்திர மொழிகளையும் வழிபாட்டு நூலான இந்த நூலில் வைத்துப் பாடியிருக்கிறார் சுவாமிகள். அவரது கருணையை எப்படிப் புகழ்ந்தாலும் தகும்"


பகுதி 6


"என்றனை ஆளும் ஏரகச் செல்வ!
மைந்தன் வேண்டும் வரம் மகிழ்ந்துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதன் என்று
உன் திருவடியை உறுதி என்று எண்ணும்
என் தலை வைத்து உன் இணையடி காக்க!
என் உயிர்க்கு உயிராம் இறைவன் காக்க!
பன்னிரு விழியால் பாலனைக் காக்க!
அடியேன் வதனம் அழகுவேல் காக்க!
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க!
கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க!
விதி செவி இரண்டும் வேலவர் காக்க!
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க!
பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க!
முப்பத்திரு பல் முனைவேல் காக்க!
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க!
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க!
என் இளங்கழுத்தை இனியவேல் காக்க!
மார்பை இரத்ன வடிவேல் காக்க!
சேர் இளமுலை மார் திருவேல் காக்க!
வடிவேல் இருதோள் வளம் பெறக் காக்க!
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க!
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க!
பழு பதினாறும் பருவேல் காக்க!
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க!
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க!
நாணாங்கயிற்றை நல்வேல் காக்க!
ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க!
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க!
வட்டக் குதத்தை வல்வேல் காக்க!
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க!
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க!
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க!
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க!
முன்கை இரண்டும் முரண்வேல் காக்க!
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க!
நாவில் சரஸ்வதி நற்றுணையாக!
நாபிக் கமலம் நல்வேல் காக்க!
முப்பால் நாடியை முனைவேல் காக்க!
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க!

இந்தப் பகுதியை இன்னும் சிறு பகுதிகளாகப் பிரிக்காமல் இப்படியே பொருள் காண்பது தான் பொருத்தம்.

இந்த நூலின் பெயரான கவசம் என்பதற்கு ஏற்ற பாடல் வரிகள் இவை. உடலின் ஒவ்வொரு உறுப்பினையும் காக்கும்படி வேண்டும் வரிகள்.

என்றனை ஆளும் ஏரகச் செல்வ!

என்னை ஆளும் திருவேரகத்தின் தலைவனே!

மைந்தன் வேண்டும் வரம் மகிழ்ந்துதவும்

உன் குழந்தையான நான் வேண்டும் வரங்களை எல்லாம் மகிழ்ச்சியுடன் தந்தருள்கின்றாய்!

லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதன் என்று

லாலா லாலா லாலா என்ற பெரும் ஒலியுடன் அருள்கொண்டு ஆடுபவர்களின் மேல் இறங்கும் ஆவேசமும், உனக்கும் உன் அடியார்களுக்கும் மகிழ்வினை உண்டாக்கும் வினோதமான திருவிளையாடல்களும் உடையவன் என்று உன்னைப் போற்றி

உன் திருவடியை உறுதி என்று எண்ணும்
என் தலை வைத்து உன் இணையடி காக்க!

உனது திருவடிகளே நிலையான செல்வம் என்று எண்ணும் எனது தலையின் மீது உன் இணையான திருவடிகளை வைத்து என் தலையை காக்க வேண்டும்!

என் உயிர்க்கு உயிராம் இறைவன் காக்க!
பன்னிரு விழியால் பாலனைக் காக்க!

என் உயிருக்கு உயிராக உள்ள இறைவனே என்னை காக்க வேண்டும்! உனது பன்னிரு விழிகளால் உனது குழந்தையான என்னைக் காக்க வேண்டும்!

அடியேன் வதனம் அழகுவேல் காக்க!

அடியவனின் முகத்தை அழகுவேல் காக்கட்டும்!

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க!

திருநீற்றுப்பொடியினை அணிந்த என் நெற்றியை புனிதவேல் காக்கட்டும்!

கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க!

எனது இரண்டு கண்களையும் கதிவேல் காக்கட்டும்!

விதி செவி இரண்டும் வேலவர் காக்க!

பிரமனால் படைக்கப்பட்ட எனது இரண்டு செவிகளையும் வேலவர் காக்கட்டும்!

நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க!

என் மூக்குத் துளைகள் இரண்டையும் நல்வேல் காக்கட்டும்!

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க!

பேசும் எனது வாயைப் பெருவேல் காக்கட்டும்!

முப்பத்திரு பல் முனைவேல் காக்க!

எனது முப்பத்திரண்டு பற்களையும் முனைவேல் காக்கட்டும்!

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க!

சொற்களைச் செப்பும் எனது நாவைச் செவ்வேல் காக்கட்டும்!

கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க!

எனது இரு கன்னக்கதுப்புகளையும் கதிர்வேல் காக்கட்டும்!

என் இளங்கழுத்தை இனியவேல் காக்க!

என் இளமையான கழுத்தை இனியவேல் காக்கட்டும்!

மார்பை இரத்ன வடிவேல் காக்க!

என் நடுமார்பை இரத்ன வடிவேல் காக்கட்டும்!

சேர் இளமுலை மார் திருவேல் காக்க!

இரண்டு பக்கங்களிலும் இணையாகச் சேர்ந்திருக்கும் பக்கமார்புகளை திருவேல் காக்கட்டும்!

வடிவேல் இருதோள் வளம் பெறக் காக்க!

எனது இரண்டு தோள்களும் வளமுடன் இருக்குபடி வடிவேல் காக்கட்டும்!

பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க!

என் பிடரிகள் இரண்டையும் பெருவேல் காக்கட்டும்!

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க!

என் முதுகு அழகுடன் இருக்கும்படி அருள்வேல் காக்கட்டும்!

பழு பதினாறும் பருவேல் காக்க!

என் பதினாறு விலா எலும்புகளையும் பருவேல் காக்கட்டும்!

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க!

என் வயிறு நோயின்றி விளங்க வெற்றிவேல் காக்கட்டும்!

சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க!

எனது சிறிய இடை அழகு பெறும்படி செவ்வேல் காக்கட்டும்!

நாணாங்கயிற்றை நல்வேல் காக்க!

என் இடுப்பில் அணியும் அரைஞான் கயிற்றை நல்வேல் காக்கட்டும்!

ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க!

ஆண்குறிகள் இரண்டையும் அயில்வேல் காக்கட்டும்!

பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க!

இரண்டு பிட்டங்களையும் பெருவேல் காக்கட்டும்!

வட்டக் குதத்தை வல்வேல் காக்க!

வட்டவடிவான குதத்தை வல்வேல் காக்கட்டும்!

பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க!

வலிமையான தொடைகள் இரண்டையும் பருவேல் காக்கட்டும்!

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க!

எனது கணைக்கால்களையும் முழந்தாள்களையும் கதிர்வேல் காக்கட்டும்!

ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க!

ஐந்து விரல்களுடன் கூடிய என் பாதங்களை அருள்வேல் காக்கட்டும்!

கைகள் இரண்டும் கருணைவேல் காக்க!

இரண்டு கைகளையும் கருணைவேல் காக்கட்டும்!

முன்கை இரண்டும் முரண்வேல் காக்க!

இரண்டு முன்கைகளையும் முரண்வேல் காக்கட்டும்!

பின்கை இரண்டும் பின்னவள் இருக்க!

இரண்டு பின்கைகளையும் பின்னவளான திருமகள் இருந்து காக்கட்டும்!

நாவில் சரஸ்வதி நற்றுணையாக!

எனது நாவில் சரஸ்வதி அமர்ந்து நல்ல துணை ஆகட்டும்!

நாபிக் கமலம் நல்வேல் காக்க!

தாமரை போல் வடிவுடைய என் தொப்புளை நல்வேல் காக்கட்டும்!

முப்பால் நாடியை முனைவேல் காக்க!

மூன்று பிரிவாகச் செல்லும் என் உடலிலுள்ள நாடிகளை முனைவேல் காக்கட்டும்!

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க!

என்னை எப்பொழுதும் எதிர்வேல் காக்கட்டும்!


விளக்கிக் கூறும்படியான ஓரிரு வரிகள்.


என்றனை ஆளும் ஏரகச் செல்வ!

இறைவனின் உரிமைப் பொருட்களே இங்கே இருக்கும் உயிர்ப்பொருட்களும் உயிரில்லாப்பொருட்களும். இறைவனுக்கும் ஒவ்வொரு உயிருக்கும் தனித்தனியே ஆள்பவன், அடிமை என்னும் தொடர்பு எப்போதும் இருக்கிறது. பொருளுக்கு உரியவன் பொருளைக் காத்துக்கொள்வதைப் போல் உயிருக்கு உரியவன் ஆன இறைவனும் ஒவ்வொரு உயிரையும் காத்துக் கொள்கிறான்.

இப்படி ஒவ்வொரு உயிருக்கும் தலைவனாக, உடையவனாக இறைவன் இருப்பதை உணர்ந்த ஒருவன் பாடும் வரிகள் இவை. திருவேரகச் செல்வனான இறைவனே என்றனை ஆள்பவன் என்று உணர்ந்தவர் பாடும் வரிகள் இவை.

அந்த அடியவன் தனக்கும் இறைவனுக்கும் உள்ள என்றும் அழியாத உறவையே உறுதியென்று நம்புபவன்! அந்த உறவின் அடையாளமாக இறைவனின் திருவடிகளில் தன் தலை பணிந்து இருப்பதையே உறுதியென்று வாழ்பவன்! வைத்த நிதி, உறவினர், மக்கள், தான் பெற்ற கல்வி போன்றவற்றை உறுதியாக எண்ணும் உயிர்களின் நடுவில் இறைவனின் திருவடிகளையே உறுதியென்று எண்ணும் அடியவன் இவன்!

உன் திருவடியை உறுதி என்று எண்ணும்
என் தலை வைத்து உன் இணையடி காக்க!

இந்த உடலின் எல்லா செயல்களுக்கும் அடிப்படையாக இருப்பது இந்த உடலின் உள்ளே இருக்கும் உயிர். அதுவே இந்த உடலின் செயல்களான கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலன்களையும் இயக்கி, இந்த உடலை வளர்த்து, இந்த உடலை நடத்திச் செல்கிறது. இந்த உடலை ஆள்வதுவும் இந்த உயிரே. இந்த உடல் இந்த உயிருக்கே உடைமையானது.

அது போல இந்த உயிரின் உயிராக இருப்பவன் இறைவன். உயிரின் அனைத்துச் செயல்களுக்கும் அடிப்படையாக இருப்பவன் இறைவன். இந்த உயிரை வளர்த்து, இயக்கி, நடத்திச் செல்பவன் இறைவன். இந்த உயிரை ஆள்பவனும் இறைவனே. இந்த உயிர் இறைவனுக்கே உடைமையானது.

என் உயிர்க்கு உயிராம் இறைவன் காக்க!

ஒருவரைப் பார்ப்பவர்கள் முதலில் அவரது முகத்தைத் தான் பார்க்கிறார்கள். அதனால் முகத்திற்கு அழகு முக்கியம். அந்த முகத்தைக் காப்பதும் அழகுவேலாக இருக்க வேண்டும்.

அடியேன் வதனம் அழகுவேல் காக்க!

திருநீறு புனிதமானது. புனிதமற்றவற்றை எல்லாம் நீக்கி புனிதமாக்கவல்லது. அந்த திருநீற்றை அணிந்திருக்கும் நெற்றியை காப்பது புனிதவேலாக இருக்கட்டும்.

பொடி புனை நெற்றியைப் புனிதவேல் காக்க!

ஒளிவீசும் கண்களை வேண்டுவதால் கதிரொளி வீசும் கதிர்வேல் அதனைக் காக்க வேண்டும்.

கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க!

கூர்மையான பற்களைக் காப்பது கூர்மையான முனைவேலாக இருக்கட்டும்.

முப்பத்திருபல் முனைவேல் காக்க!

நாவால் சொல்லுவதெல்லாம் செம்மையுடன் இருக்க வேண்டுவதால் செவ்வேல் நாவைக் காக்கட்டும்!

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க!

இப்படியே ஒவ்வொரு உறுப்பையும் காப்பதற்கு ஒரு தனிக்குணத்தை சிறப்பாக வைத்து அந்த குணத்தை உடைய வேல் அந்த உறுப்பைக் காக்க வேண்டும் என்று வேண்டுகிறார் அடிகளார்



பகுதி 7


"எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க.

அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க!
வரும் பகல் தன்னில் வச்ரவேல் காக்க!
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க!
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க!
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க!
காக்க காக்க கனகவேல் காக்க!
நோக்க நோக்க நொடியினில் நோக்க!
தாக்க தாக்க தடையறத் தாக்க!
பார்க்க பார்க்க பாவம் பொடிபட!

சென்ற பகுதியின் தொடர்ச்சியாகவே இந்தப் பகுதியும் அமைகிறது. செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப பயன்கள் இந்தப் பிறவியில் கிடைக்கின்றன. எல்லா விதமான துன்பங்களில் இருந்தும் இறைவனின் அருள் உருவாகிய திருவேல் காக்க வேண்டும் போது அந்த துன்பங்களுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் எல்லா பாவங்களும் தூள் தூளாகப் போவது போல் இறைவன் திருவருட் கருணைப் பார்வை கிடைக்க வேண்டும் என்று இந்தப் பகுதியில் வேண்டுகிறார் அடிகளார்.

கடைசி காலம் வரையில் கந்தன் கருணைப் பார்வை வேண்டும். மூச்சு நிற்பதற்கு சற்று முன்னர் நிற்பது பேச்சு. உயிரில்லாதவரைப் போல் மூர்ச்சையுற்றுக் கிடப்பவரை பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கிறார் என்று தானே சொல்கிறோம். அப்படி கடைசி காலத்தில் பேச்சும் மூச்சும் நிற்கும் காலம் வரையில் விரைவாக வந்து கனகவேல் காக்க வேண்டும்.

உன் அடியவனாகிய எனது பேச்சு இருக்கும் காலம் எல்லாம் விரைவாக வந்து உனது கனகவேல் காக்கவேண்டும்!

அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க!

இருக்கும் காலம் வரையில் இறைவன் துணை வேண்டும்! இரவும் பகலும் இறைவன் திருக்கை வேலின் துணை வேண்டும்!

நாள்தோறும் வருகின்ற பகல் நேரங்களில் வச்சிரம் போல் வலிமை உடைய வேல் காக்கவேண்டும்! அரையிருள் நேரத்திலும் அந்த வேலே காக்கவேண்டும்! முன்னிரவு நேரமான ஏமத்திலும் நடு இரவான நடுச்சாமத்திலும் பகைவர்களை எதிர்த்து அழிக்கும் எதிர்வேல் காக்க வேண்டும்!

வரும் பகல் தன்னில் வச்ரவேல் காக்க!
அரையிருள் தன்னில் அனைய வேல் காக்க!
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க!

எந்நேரத்திலும் மயக்கம், குழப்பம், அமைதியின்மை, சோம்பல் போன்றவற்றை ஏற்படுத்தும் தாமதகுணம் என்னை அண்டாமல் அந்தக் குணத்தினை நீக்கி திறமையுடைய வேல் காக்கவேண்டும்!

தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க!

கனகவேல் விரைந்து எப்போதும் என்னைக் காக்க காக்க காக்க! விரைவாக என் மேல் உனது கருணைத் திருவிழிகளால் நோக்குக நோக்குக நோக்குக! எல்லாவிதமான தடைகளும் அறவே நீங்கும்படி அவற்றைத் தாக்குக தாக்குக தாக்குக! உன் கருணைத் திருவிழிகளால் என் பாவங்கள் எல்லாம் பொடியாகப் போகும் வண்ணம் பார்க்க பார்க்க!

காக்க காக்க கனகவேல் காக்க!
நோக்க நோக்க நொடியினில் நோக்க!
தாக்க தாக்க தடையறத் தாக்க!
பார்க்க பார்க்க பாவம் பொடிபட!"


பகுதி 8

அறிவியல் சார்ந்த சிந்தனை கொண்டவர்கள் நம்ப மறுக்கும் சிலவற்றை அடிகளார் இந்தப் பகுதியில் கூறுகிறார். ஐம்புலன்களுக்கு எளிதில் எட்டாதவை எத்தனையோ இருப்பதை அறிவியலாளர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால் அப்படி நம் ஐம்புலன்களுக்கு இன்னும் எட்டாத சிலவற்றைப் பற்றி அடிகளார் இங்கே சொல்கிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான். அப்படியும் மனம் ஏற்கவில்லை என்றால் துன்பங்களின் பலவிதமான வடிவங்களை இப்பகுதியில் சொல்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்"


பில்லிச் சூனியம் பெரும்பகை அகல!
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம ராக்ஷதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட!
இரிசி காட்டேரி இத்துன்பச் சேனையும்
எல்லினும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்
விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக்காரரும் சண்டாளர்களும்
என் பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓடிட!"

பில்லிச் சூனியம் என்பது ஒருவர் மீது அவரது பகைவர்கள் ஏவிவிடும் மந்திர வடிவான துன்பம். அந்தத் துன்பங்களும் வலிமையுடைய பெரும்பகைவர்களால் ஏற்படும் துன்பங்களும் அகல வேண்டும்!

பில்லிச் சூனியம் பெரும்பகை அகல!

வலிமையுடைய பூதங்களும், மிகவும் வலிமையுடைய பேய்களும், அல்லல்களைக் கொடுத்து எந்த விதமான மந்திர தந்திரங்களுக்கும் அடங்காத முனிகளும், சிறுபிள்ளைகளைத் தின்று வீடுகளின் பின்புறத்தில் இருக்கும் புழைக்கடைகளில் வாழும் முனிகளும், தீயை வாயில் கொண்டு எல்லோரையும் பயமுறுத்தும் கொள்ளிவாய்ப் பேய்களும், குள்ள வடிவம் கொண்டிருக்கும் குறளைப் பேய்களும், வயதுப் பெண்களைத் தொடர்ந்து சென்று பயமுறுத்து பிரம்ம ராட்சதரும், உன் அடியவனான என்னைக் கண்டவுடன் அலறிக் கலங்கிட வேண்டும்!

வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம ராக்ஷதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட!

வயதிற்கு வரும் முன்னரே சிறுவயதிலேயே துர்மரணம் அடைந்த பெண்கள் கொள்ளும் இரிசி என்னும் பேய் வடிவங்களும், குருதியை விரும்பி உண்ணும் காட்டேரிகளும், இவை போன்ற துன்பங்களைக் கொடுக்கவே இருக்கும் படைகளும், பகலிலும் இருட்டிலும் எதிரே வந்து மிரட்டும் அண்ணர்களும், உயிர்ப்பலிகளுடன் கூடிய கனபூசைகளை விரும்பிப் பெற்றுக் கொள்ளும் காளி முதலானவர்களும், மிகுந்த ஆங்காரத்தை உடையவர்களும், இன்னும் மிகுதியான பலம் கொண்டிருக்கும் பேய்களும், பல்லக்கில் ஏறிவந்து அதிகாரம் செய்யும் தண்டியக்காரர்களும், சண்டாளர்களும், என் பெயரைச் சொன்னவுடனேயே இடி விழுந்தது போல் பயந்து ஓடிட வேண்டும்!

இரிசி காட்டேரி இத்துன்பச் சேனையும்
எல்லினும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்
விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக்காரரும் சண்டாளர்களும்
என் பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓடிட!"

இந்தப் பகுதியின் தொடர்ச்சியாகவே அடுத்த பகுதிகளும் வருகின்றன. 


பகுதி 9

ஆனை அடியினில் அரும்பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகள் உடனே பல கலசத்துடன்
மனையில் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒரு வழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட!

"இந்தப் பகுதியில் மந்திரதந்திரங்களினால் கேடு உண்டாகாத வண்ணம் காக்க வேண்டும் என்று வேண்டுகிறார் தேவராய சுவாமிகள்.

ஒருவரை அழிக்க நினைத்து அவரைப் போல் மாவினாலும் மரத்தினாலும் பாவை என்னும் சிறு உருவங்களைச் செய்து அவற்றில் மந்திரத்தை உருவேற்றி அவற்றை யானைகள் கட்டப்பட்டிருக்கும் இடத்திலும் புற்றுகள் நிறைந்திருக்கும் இடத்திலும் புதைத்து வைப்பார்கள். யானையின் காலடியில் மிதிபட்டும் புற்றுகளில் இருக்கும் கரையான்களால் உண்ணப்பட்டும் அந்த பதுமைகள் மற்றவர்களால் கண்டெடுக்கப்பட்டு மாற்று மந்திரம் செய்யப்படும் முன்னர் உருக்குலையும்; அப்படி நேர்ந்தால் யாரை அழிக்க நினைத்து அப்பாவைகளைப் புதைத்து வைத்தார்களோ அவர்களின் அழிவு உறுதியாகும் என்பது சூனியம் வைப்பவர்களின் நம்பிக்கை.

அப்படி யானை அடியினில் வைக்கப்பட்ட அரும்பாவைகளும்

ஆனை அடியினில் அரும்பாவைகளும்

காட்டுப்பூனையின் முடி, தலைச்சன் பிள்ளைகளின் எலும்பு, நகம், தலைமுடி, நீண்ட முடியுடன் கூடிய மண்டை போன்றவற்றுடன் பாவைகளும் பல கலசங்களும் மந்திர உருவேற்றப்பட்டு ஒருவரின் அழிவை விரும்பி அவரது வீட்டில் புதைத்து வைக்கப்படும். அப்படி வீட்டில் புதைத்து வைக்கப்பட்ட வஞ்சனையும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகள் உடனே பல கலசத்துடன்
மனையில் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியம் என்பது ஒருவகை சூனிய மந்திரச் சாத்திரம். அந்த நூலில் கூறப்பட்ட வகையில் செய்யப்பட்ட மந்திர தந்திரங்கள் ஒட்டியச் செருக்குகள். அந்த நூலில் கூறப்பட்ட வகையில் செய்யப்பட்ட பாவைகள் ஒட்டியப் பாவைகள். அந்த ஒட்டியச் செருக்கும், ஒட்டியப் பாவையும், கூடவே புதைக்கப்பட்ட காசும் பணமும், பலி கொடுக்கப்பட்ட விலங்குகளின் குருதியில் கலந்த சோறும், அந்த ஒட்டியச் சாத்திரம் கூறும் மந்திர மையும், மனம் கலங்கித் தனி வழியே போகும்படி செய்யும் மந்திரமும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒரு வழிப் போக்கும்

உன் அடிமையான என்னைக் கண்டவுடனே நடுங்கி அழிந்து போகும் படி நீ அருள் செய்ய வேண்டும்!

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட!


பகுதி 10

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட!

காலதூதாள் எனைக் கண்டால் கலங்கிட!
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட!
வாய் விட்டலறி மதி கெட்டு ஓட!
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு!
கட்டி உருட்டு கால்கை முறிய!
கட்டு கட்டு கதறிடக் கட்டு!
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட!
செக்கு செக்கு செதில் செதில் ஆக!
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு!
குத்து குத்து கூர்வடிவேலால்!
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது ஆக!
விடுவிடு வேலை வெருண்டது ஓட!

"எதிரிகளும் கூடவே இருந்து குழி பறிக்கும் வஞ்சகர்களும் உயிரைப் பறிக்க வரும் எம தூதர்களும் அழிந்து போகும்படி அருள் செய்ய வேண்டுகிறார்.

எதிரிகளும் வஞ்சகர்களும் மனம் திருந்தி வந்து என்னை வணங்கிட வேண்டும்!

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட!

காலனின் தூதர்களான எம தூதர்கள் என்னைக் கண்டால் கலங்க வேண்டும்!

காலதூதாள் எனைக் கண்டால் கலங்கிட!

அவர்கள் என்னைக் கண்டால் அஞ்சி நடுங்க வேண்டும்! பயந்து புரண்டு ஓட வேண்டும்! வாய் விட்டு அலறி புத்தி கெட்டு ஓட வேண்டும்!

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட!
வாய் விட்டு அலறி மதி கெட்டு ஓட!

மனம் திருந்தாத பகைவர்களையும் வஞ்சகரகளையும் இந்த காலதூதர்கள் கொண்டு வரும் பாசக் கயிற்றால் படியினில் முட்டும்படி கட்ட வேண்டும்! அவர்கள் உடல் உறுப்புகள் எல்லாம் கதறிடக் கட்ட வேண்டும்! அவர்கள் கால் கைகள் எல்லாம் முறியும் படி கட்டி உருட்ட வேண்டும்! அவர்கள் விழிகள் பிதுங்கும்படி முட்ட வேண்டும்! அவர்கள் செதில் செதிலாக உதிர்ந்து போகும் படி அவர்களை நீ செகுக்க வேண்டும்!

படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு!
கட்டி உருட்டு கால்கை முறிய!
கட்டு கட்டு கதறிடக் கட்டு!
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட!
செக்கு செக்கு செதில் செதில் ஆக!

அழகனே! சூரனின் பகைவனான அழகனே! கூர்மையான உன் அழகான வேலால் அவர்களைக் குத்த வேண்டும்! பகலவனின் எரிக்கும் தணல் போல நீ அவர்களைப் பற்றி எரிக்க வேண்டும்! அவர்கள் வெருண்டு ஓடும் படி உன் வேலை விட வேண்டும்!

சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு!
குத்து குத்து கூர்வடிவேலால்!
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது ஆக!
விடுவிடு வேலை வெருண்டது ஓட!
  

பகுதி 11

"புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனி தொடர்ந்தோட!
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க!
ஒளிப்பும் சுளுக்கும் ஒரு தலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தும்
சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப்பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்!

இந்தப் பகுதியில் கொடிய விலங்குகளிடமிருந்தும், விஷப் பூச்சிகளிடமிருந்தும், நோய்களிடமிருந்தும் காக்க வேண்டும் என்று வேண்டுகிறார் சுவாமிகள்.

என்னைத் தாக்க வரும் புலிகளும், நரிகளும், சிறிய நரிகளும், நாய்களும், எலிகளும், கரடிகளும் என்னைக் கண்டதும் உன் அருளால் என்னைத் தாக்காமல் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து அவை ஓட வேண்டும்!

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனி தொடர்ந்து ஓட!

விஷ ஜந்துகளான தேள்களும் பாம்புகளும் செய்யான் எனப்படும் பெரும்பூரான்களும், சிறுபூரான்களும், கொடிய விஷங்களையுடைய பற்களால் கடித்து உயர் அங்கங்களான தலை, மார்பு போன்ற அங்கங்களில் விஷம் ஏறியிருந்தாலும் அவை எளிதுடன் இறங்க நீ அருள வேண்டும்!

தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்து உயர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க!

ஆளை உருத் தெரியாமல் குலைக்கும் குஷ்டம் முதலிய பெரு நோய்களும் (ஒளிப்பும்), சுளுக்கு முதலான சிறு நோய்களும், ஒற்றைத் தலைவலியான ஒரு தலை நோயும், வாயு தொடர்பான வாத நோய்களும், குளிர் நோயான சயித்தியமும், கை கால்கள் இழுக்கும் வலிப்பு நோயும், பித்தத்தால் உண்டாகும் மனநோய் முதலியவையும், வயிற்று வலியான சூலை நோயும், எலும்பை உருக்கும் க்ஷய நோயும், குன்ம நோயும், உடற்சோர்வு என்னும் சொக்குநோயும், அரிக்கும் சிரங்கும், கை கால் குடைச்சலும், சிலந்தி நோயும், குடலில் வரும் சிலந்தி நோயும், விலாப்புறங்களில் வரும் பக்கப்பிளவையும், தொடையில் படரும் வாழையும், கடுவன் படுவன் முதலிய நோய்களும், கை கால்களில் வரும் சிலந்தியும், பல் குத்து நோயும், பல்லில் வரும் அரணையும், இடுப்பில் வரும் பெரிய அரையாப்பு என்னும் கட்டிகளும், எல்லாப் பிணிகளும் என்னைக் கண்டால் நில்லாது ஓடும்படி நீ எனக்கு அருள் செய்ய வேண்டும்!

ஒளிப்பும் சுளுக்கும் ஒரு தலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தும்
சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப்பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்!


பகுதி 12

ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண் ஆள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்
உன்னைத் துதிக்க உன் திருநாமம்!
சரஹண பவனே! சைலொளி பவனே!
திரிபுர பவனே! திகழ் ஒளி பவனே!
பரிபுர பவனே! பவம் ஒளி பவனே!
அரி திரு மருகா! அமராபதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்!
கந்தா! குகனே! கதிர்வேலவனே!
கார்த்திகை மைந்தா! கடம்பா! கடம்பனை
இடும்பனை அழித்த இனிய வேல் முருகா!
தணிகாசலனே! சங்கரன் புதல்வா!
கதிர்காமத்து உறை கதிர்வேல் முருகா!
பழநிப் பதி வாழ் பாலகுமாரா!
ஆவினன்குடி வாழ் அழகிய வேலா!
செந்தின்மாமலை உறும் செங்கல்வராயா!
சமராபுரி வாழ் சண்முகத்தரசே!

"தீமைகளை விலக்கி அருள வேண்டும் என்று வேண்டியதன் பின் உலகத்து நன்மைகளை எல்லாம் தரும் முருகனின் திருநாமங்களைப் பாடிப் பரவுகிறார் அடிகளார்.

பூலோகம், புவர்லோகம், சுவர்க்கலோகம், மஹர்லோகம், ஜனலோகம், தபலோகம், சத்யலோகம் என்ற ஏழு மேல் உலகங்களும், அதலலோகம், சுதலலோகம், விதலலோகம், ரசாதலலோகம், தலாதலலோகம், மஹாதலலோகம், பாதாளலோகம் என்ற ஏழு கீழ் உலகங்களும், அவற்றில் இருக்கும் அனைத்தும் எனக்கு நன்மை செய்யும் உறவினர்கள் ஆகவும், ஆண்களும் பெண்களும் அனைவரும் எனக்காக, உலகங்களை ஆளும் அரசர்களும் மகிழ்ந்து எனக்கு உறவாகவும் அருளுகின்ற உன் திருநாமங்களால் உன்னைத் துதிக்க அருள் செய்தாய்.

ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண் ஆள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்
உன்னைத் துதிக்க உன் திருநாமம்!

சரவணப் பொய்கையில் உதித்தவனே
சரஹண பவனே!

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று போற்றும்படி அனைத்து மலைகளுக்கும் ஒளியும் புகழும் தருபவனே!
சைல ஒளி பவனே!

தங்கக்கோட்டை, வெள்ளிக்கோட்டை, இரும்புக்கோட்டை என்னும் முப்புரங்களை வைத்துக் கொண்டு உலக மக்களுக்குத் துன்பத்தைத் தந்த திரிபுரர்களை அழித்த சிவபெருமானை ஒத்தவனே!
திரிபுர பவனே!

எங்கும் எப்போதும் விளங்குகின்ற ஒளியை உடையவனே!
திகழ் ஒளி பவனே!

பரிபுரம் என்னும் காலணியை அணிந்து விளங்குபவனே!
பரிபுர பவனே!

பிறப்பு இறப்பு என்னும் பவச் சுழலிலிருந்து என்னை விடுவித்து பவத்தை ஒளிப்பவனே! பவம் ஒளி பவனே!

சரஹண பவனே! சைலொளி பவனே!
திரிபுர பவனே! திகழ் ஒளி பவனே!
பரிபுர பவனே! பவம் ஒளி பவனே!

திருமால் திருமகள் இருவருக்கும் மருகனே! தேவர்களின் தலைநகராகிய அமராபதியை சூரனின் கொடுமையிலிருந்து காத்துத், தேவர்களைச் சூரனின் கடுஞ்சிறையிலிருந்து விடுவித்தவனே!

கந்தனே! அடியவர்களின் மனக்குகையில் இருக்கும் குகனே! கதிரவனைப் போல் ஒளிக் கொண்ட வேலவனே! கார்த்திகைப் பெண்களின் திருமகனே! கடம்ப மாலை அணிந்தவனே! கடம்பனையும் இடும்பனையும் அழித்த இனிய வேல் முருகா!

அரி திரு மருகா! அமராபதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்!
கந்தா! குகனே! கதிர்வேலவனே!
கார்த்திகை மைந்தா! கடம்பா! கடம்பனை
இடும்பனை அழித்த இனிய வேல் முருகா!

திருத்தணிகைமலையில் இருப்பவனே! சங்கரனின் திருமகனே! கதிர்காமத்தில் உறைகின்ற கதிர்வேல் முருகா! பழநிமலையில் வாழ்கின்ற பாலகுமாரா! திருவாவினன்குடியில் வாழும் அழகிய குழந்தைவேலாயுதா! திருக்காளத்தியில் வாழும் செங்கல்வராயா! சமராபுரியெனும் திருப்போரூரில் வாழும் ஆறுமுக அரசே!

தணிகாசலனே! சங்கரன் புதல்வா!
கதிர்காமத்து உறை கதிர்வேல் முருகா!
பழநிப் பதி வாழ் பாலகுமாரா!
ஆவினன்குடி வாழ் அழகிய வேலா!
செந்தின்மாமலை உறும் செங்கல்வராயா!
சமராபுரி வாழ் சண்முகத்தரசே!


பகுதி 13

"காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என் நா இருக்க யான் உனைப் பாட!
எனைத் தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன்! பரவசமாக
ஆடினேன் ஆடினேன்! ஆவினன்பூதியை
நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன் பதம் பெறவே உன் அருளாக!
அன்புடன் இரக்ஷித்து அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக வேலாயுதனார்
சித்தி பெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க!

கந்தனின் திருநாமங்களைப் பாடிய அடிகளார் அந்தத் திருப்பெயர்களைப் பாடியதோடு மட்டும் இல்லாமல் அன்பின் மிகுதியால் ஆடியதையும் சொல்கிறார்.

கருமையான தலைமுடியை உடைய கலைமகள் என் நாவில் நன்றாய் வீற்றிருப்பதால் நான் உன்னைத் தொடர்ந்து பாட முடிகின்றது!

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என் நா இருக்க யான் உனைப் பாட!

என்னை எப்பொழுதும் விடாமல் அருகிலேயே இருக்கும் என் தந்தையான முருகப்பெருமானை நான் பாடினேன்! அந்தப் பரவசத்தில் ஆடினேன் ஆடினேன் ஆடினேன்!

எனைத் தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன்! பரவசமாக
ஆடினேன் ஆடினேன்!

திருவாவினன்குடியில் வாழும் குழந்தை வேலாயுதச் சுவாமியான உனது விபூதியை அன்புடன் நான் நெற்றியில் அணிந்து கொள்ள, பாசவினைகளின் பற்றது நீங்கி, உன் திருவடிகளைப் பெற உனது அருள் கிடைக்கும்!

ஆவினன்பூதியை
நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன் பதம் பெறவே உன் அருளாக!

வேலாயுதனே! அன்னமும் சொர்ணமும் போன்ற பலவித செல்வங்களும் நீ அன்புடன் என்னைக் காத்து அடியேன் சிறப்புடன் வாழும்படி அருள் புரிவாய்!

அன்புடன் இரக்ஷித்து அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக வேலாயுதனார்
சித்தி பெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க!


பகுதி 14

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க!
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்!
வாழ்க வாழ்க வாரணத் துவசம்!
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க!
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்!
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே!
பிள்ளை என்று அன்பாய் பிரியம் அளித்து
மைந்தன் என் மீது மனம் மகிழ்ந்து அருளி
தஞ்சம் என்று அடியார் தழைத்திட அருள் செய்!"

மயில் வாகனத்தை உடையவனே வாழ்க வாழ்க! வடிவேலை ஏந்தியவனே வாழ்க வாழ்க! மலையில் வாழும் குருவே வாழ்க வாழ்க! மலைக்குறவர் திருமகளான வள்ளியுடன் நீடூழி வாழ்க வாழ்க! சேவற் கொடி வாழ்க வாழ்க! என் வறுமைகள் எல்லாம் நீங்க நீ வாழ்க வாழ்க!

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க!
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்!
வாழ்க வாழ்க வாரணத் துவசம்!
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க!

எத்தனை எத்தனையோ குறைகளையும் பிழைகளையும் அடியேன் செய்திருந்தாலும் என்னைப் பெற்றவளான வள்ளியம்மையும், என்னைப் பெற்றவனும் குருவுமான நீயும் பொறுத்துக் கொள்ள வேண்டும்! அது உங்கள் கடமையும் ஆகும்! பிள்ளை என்று அன்பாய் என் மேல் பிரியம் வைத்து, மைந்தன் இவன் என்று என் மேலும் உன் அடியவர்கள் மேலும் மனம் மகிழ்ந்து அருளி, நீயே தஞ்சம் என்று உன் அடியவர்கள் தழைத்து வாழ அருள் செய்வாய்!

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்!
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே!
பிள்ளை என்று அன்பாய் பிரியம் அளித்து
மைந்தன் என் மீது மனம் மகிழ்ந்து அருளி
தஞ்சம் என்று அடியார் தழைத்திட அருள் செய்!


பகுதி 15

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
நேசம் உடன் ஒரு நினைவு அதுவாகிக்
கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒரு நாள் முப்பத்தாறு உருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறு அணிய
அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்
திசை மன்னர் எண்மர் செயலது அருளுவர்!
மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்!
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்!
நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்!
எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்!
கந்தர் கை வேலாம் கவசத்தடியை
வழியாய் காண மெய்யாய் விளங்கும்
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப்பொடி ஆக்கும்!

"கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லும் முறையையும் அதனால் விளையும் பயன்களையும் இங்கே அடிகளார் சொல்கிறார்.

சஷ்டி திதிக்குரிய கந்தர் சஷ்டி கவசத்தைப் பாட விரும்பிய சிறுவனாகிய தேவராயன் என்னும் நான் பாடிய இந்த நூலை, தினந்தோறும் காலையிலும் மாலையிலும் நல்ல கருத்துடன் ஆசாரத்துடன் உடல் உறுப்புகளின் அழுக்கு எல்லாம் தீரும்படி நன்கு நீராடி, அன்புடன் ஒரே நினைவாகக் கொண்டு, கந்தர் சஷ்டி கவசம் ஆகிய இந்த தோத்திரத்தை சிந்தை கலங்காமல் தியானிப்பவர்கள், ஒரு நாளுக்கு முப்பத்து ஆறு முறை உருவேற்றி ஓதி செபித்து மிகவும் மகிழ்ந்து திருநீறு அணிய

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
நேசம் உடன் ஒரு நினைவு அதுவாகிக்
கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒரு நாள் முப்பத்தாறு உருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறு அணிய

கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு என்னும் எட்டுத் திசைகளிலும் வாழும் எல்லா மக்களும் நண்பர்கள் ஆவார்கள். அந்த எட்டுத் திசைகளையும் காக்கும் தெய்வங்களான இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியவர்கள் அருள் புரிவார்கள்!

அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்
திசை மன்னர் எண்மர் செயலது அருளுவர்!

எதிரிகள் எல்லோரும் வந்து வணங்குவார்கள். நவகிரகங்களும் மகிழ்ந்து நன்மைகள் அளித்திடுவார்கள். புதிதாக வந்த மன்மதன் என்னும்படி அழகு பெறுவார்கள். எந்த நாளும் ஈரெட்டு பதினாறு வயதுடன் இளமையுடன் பதினாறு செல்வங்களும் பெற்று வாழ்வார்கள்.

மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்!
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்!
நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்!
எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்!

கந்தனின் கையில் இருக்கும் வேலைப் போல் அடியவர்களைக் காக்கும் இந்த கந்தர் சஷ்டி கவசத்தின் ஒரு அடியை பொருளுணர்ந்து படித்தால் உண்மைப் பொருள் விளங்கும். இந்த நூலையும் நூலை ஓதியவர்களையும் கண்டால் பேய்கள் பயந்து ஓடும். இந்த நூல் பொல்லாதவர்களைப் பொடிப்பொடியாக்கும்.

கந்தர் கை வேலாம் கவசத்தடியை
வழியாய் காண மெய்யாய் விளங்கும்
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப்பொடி ஆக்கும்!


பகுதி 16


நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்காரத்தடி
அறிந்து எனது உள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீர லட்சுமிக்கு விருந்து உணவாகச்
சூரபத்மாவைத் துணித்த கை அதனால்
இருபத்து ஏழ்வர்க்கு உவந்து அமுது அளித்த
குருபரன் பழனிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத் தடுத்து ஆட்கொள என்றனது உள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
தேவர்கள் சேனாபதியே போற்றி!
குறமகள் மனம் மகிழ் கோவே போற்றி!
திறம் மிகு திவ்ய தேகா போற்றி!
இடும்பாயுதனே இடும்பா போற்றி!
கடம்பா போற்றி! கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர் கிரி கனகசபைக்கு ஓர் அரசே!
மயில் நடம் இடுவோய் மலரடி சரணம்!
சரணம் சரணம் சரஹண பவ ஓம்!
சரணம் சரணம் சண்முகா சரணம்!

"சஷ்டி கவசத்தின் இறுதிப் பகுதி இது. இறைவன் திருவடிகளே சரணம் என்று போற்றி இந்தத் துதிப்பாடலை நிறைவு செய்கிறார் அடிகளார்.

நல்லவர்களான அடியவர்களின் நினைவில் நின்று என்றும் நடனம் செய்யும் திருவடிகள் எல்லா பகையையும் அழிக்கும் முருகப்பெருமானின் திருவடிகள். அவற்றை அறிந்து எனது உள்ளத்திலும் இருத்தினேன்.

அஷ்ட லக்ஷ்மிகளில் வீர லக்ஷ்மிக்கு விருந்து உணவாக சூரபத்மனைத் துணித்தத் திருக்கைகளால் இருபத்தி ஏழு நட்சத்திர தேவதைகளில் கார்த்திகைக்கு உரிய தேவதைகளிடம் அமுது உண்டு கார்த்திகேயன் என்று பெயர் பெற்று எல்லா நட்சத்திரங்களுக்கும் பெருமை தந்த குருபரனான பழனிக்குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தையின் சிவந்த திருவடிகள் போற்றி!

நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்காரத்தடி
அறிந்து எனது உள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீர லட்சுமிக்கு விருந்து உணவாகச்
சூரபத்மாவைத் துணித்த கை அதனால்
இருபத்து ஏழ்வர்க்கு உவந்து அமுது அளித்த
குருபரன் பழனிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!

தீய வழிகளில் நான் செல்லாமல் என்னைத் தடுத்து உனது அடியவனாக என்னை ஆட்கொள்வதற்காக நீயாகவே உன் கருணையினால் எனது உள்ளத்தில் நிறைந்த அழகிய வடிவு உடைய வேலவனே போற்றி!

தேவர்களின் சேனைத்தலைவனே போற்றி!

குறவர்களின் திருமகளான வள்ளியம்மையின் மனத்தை மகிழ்விக்கும் தலைவனே போற்றி!

வலிமையுடைய தெய்வீகமான திருவுடலை உடையவனே போற்றி!

எனைத் தடுத்து ஆட்கொள என்றனது உள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
தேவர்கள் சேனாபதியே போற்றி!
குறமகள் மனம் மகிழ் கோவே போற்றி!
திறம் மிகு திவ்ய தேகா போற்றி!

இடும்பைகள் என்னும் துன்பங்களை ஆயுதமாக உடையவனே! இடும்பைகளை நீக்குபவனே! போற்றி!

கடம்ப மாலை அணிந்தவனே போற்றி! கந்தனே போற்றி!

வெட்சி மாலை அணியும் தலைவனே போற்றி!

இடும்பாயுதனே இடும்பா போற்றி!
கடம்பா போற்றி! கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!

மிக உயர்ந்த கந்தகிரியில் இருக்கும் பொற்சபைக்கு ஒப்பில்லாத அரசனே! மயிலில் ஏறி நடனம் இடுபவனே! உனது மலர் போன்ற திருவடிகள் சரணம்! ஆறெழுத்து மந்திரத்திற்குத் தலைவனே சரணம் சரணம்! ஆறுமுகத்தரசே சரணம் சரணம்!

உயர் கிரி கனகசபைக்கு ஓர் அரசே!
மயில் நடம் இடுவோய் மலரடி சரணம்!
சரணம் சரணம் சரஹண பவ ஓம்!
சரணம் சரணம் சண்முகா சரணம்!

Post: Kanthar Sashti Kavasam_ ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம்
Link: http://pidithavai.blogspot.com/2017/10/kanthar-sashti-kavasam.html

2 comments:

  1. வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. மலன் எனில் காம வெகுளி மயக்கம் ஆகிய அழுக்குகள்.நிமலன் இவை இல்லாதவன்.சிவன் பிறவா யாக்கை பெரியோன்.எனவே அழுக்குகள் அண்டாதவன்.

    ReplyDelete