Thursday 5 November 2020

கஷாயம்

# திங்கட்கிழமை:

வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது.


#செவ்வாய்க்கிழமை:

கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும்.


# புதன்கிழமை:

தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும்.


# விழயாகிழமை:

சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும்.


# வெள்ளிக்கிழமை:

வெந்தயம், தனியா சமஅளவு சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும்.


# சனிக்கிழமை:

முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கும்.


# ஞாயிற்றுக்கிழமை:

சுக்கு மல்லி காபி குடிக்கலாம்.


இப்படி பழகிக்கொண்டால் எந்த வியாதியும் வராது, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

 கணியன் #பூங்குன்றனார் 

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அடுத்த மகிபாலன்பட்டி 

சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய  பழமையான பாடல் இது.


 யாதும் ஊரே யாவரும் கேளிர்


இதன் முதல் வரி மட்டுமே பிரபலம்.

பாடலின்

எல்லா வரிகளும் வாழ்வின்

முழு தத்துவத்தைச் 

சொல்கிறது.


முழு பாடலும் அதன் பொருளும்👇.


"யாதும் ஊரே; யாவரும் கேளிர்,

தீதும் நன்றும் பிறர்தர வாரா,

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன,

சாதலும் புதுவது அன்றே,

வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே, 

முனிவின் இன்னாது என்றலும் இலமே 

மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது

கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்

ஆதலின் மாட்சியின்

பெயோரை வியத்தலும் இலமே,

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.


பொருள்👇


"யாதும் ஊரே யாவரும் கேளிர்" 


எல்லா ஊரும் எனது ஊர்.

எல்லா மக்களும் எனக்கு உறவினர் என்று நினைத்து,

அன்பே வாழ்வின் அடிப்படை, ஆதாரம் என்று

வாழ்ந்தால், இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது, சுகமானது.


"தீதும் நன்றும் பிறர் தர வாரா"


'தீமையும் நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை' எனும் உண்மையை உணர்ந்தால்

சக மனிதர்களிடம் விருப்பு வெறுப்பு இல்லா ஒரு சம நிலை சார்ந்த வாழ்வு கிட்டும்.


"நோதலும் தனிதலும்

அவற்றோ ரன்ன"


துன்பமும் ஆறுதலும் கூட

மற்றவர் தருவதில்லை.

மனம் பக்குவப்பட்டால்,

அமைதி அங்கேயே கிட்டும்.


"சாதல் புதுமை யில்லை"


பிறந்த நாள் ஒன்று உண்டெனில்,

இறக்கும் நாளும் ஒன்று உண்டு.

இறப்பு புதியதல்ல. அது

இயற்கையானது.

எல்லோருக்கும்

பொதுவானது.

இந்த உண்மையை

உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால்

எதற்கும் அஞ்சாமல்

வாழ்க்கையை வாழும் வரை ரசிக்கலாம்.


"வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே

முனிவின் இன்னாது என்றலும் இலமே"


இந்த வாழ்க்கையில்

எது, எவர்க்கு, எப்போது,

என்ன ஆகும் என்று

எவர்க்கும் தெரியாது.

இந்த வாழ்க்கை மிகவும்

நிலை அற்றது.

அதனால், இன்பம் வந்தால்

மிக்க மகிழ்வதும் வேண்டாம்.

துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்.

வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்.


"மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாதுகல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்"


இந்த வானம் நெருப்பாய்,

மின்னலையும் தருகிறது.

நாம் வாழ 

மழையையும்

தருகிறது. இயற்கை வழியில் அது அது

அதன் பணியை செய்கிறது.

ஆற்று வெள்ளத்தில்,

கற்களோடு, அடித்து முட்டி செல்லும் படகு போல,

வாழ்க்கையும், சங்கடங்களில் அவரவர் ஊழ்படி அதன் வழியில்

அடிபட்டு போய்கொண்டு

இருக்கும்.

இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்.


"ஆதலின் மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"


இந்த தெளிவு

பெற்றால்,

பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து

மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம்.

சிறிய நிலையில் உள்ள

சிறியவர்களைப் பார்த்து

ஏளனம் செய்து இகழ்வதும்

வேண்டாம்.

அவரவர் வாழ்வு

அவரவர்க்கு

அவற்றில் அவரவர்கள்

பெரியவர்கள்.


Wednesday 4 November 2020

கோபம் எதனால் வருகிறது ..!!

 கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது..!!


அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள். 


ஒருவர் கூறினார், 


நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. 


நான் ஒன்று சொன்னால், 

அவர்கள் ஒன்று செய்கிறார்கள்.

இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார்.


மற்றொருவர், 


யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார். 


அடுத்தவர், 


நான் செய்யாததை செய்த மாதிரி சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான் அவங்க என்கிறார். 


இன்னொருவர், 


சொன்னதை திரும்ப திரும்ப சொன்னா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுன்னு சொல்றார். 


வேறொருவரோ, 


நினைச்சது கிடைக்கலைன்னா சும்மா விடமாட்டேனுட்டார். 


இப்படி ஒவ்வொருவரும் 

தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர். 


இப்படி அடுத்தவர்கள் ஏதாவது செய்தால் இவர்களுக்கு கோபம் ஏற்படுமாம்.


அது சரி...


நீங்களே ஏதாவது தவறு செய்தால் உங்கள் மீது கோபப்படுவீர்களா? 

என்றதற்கு, 


அது எப்படீங்க நம்ம மேலேயே நம்ம கோபப்படுவோமா என்றனர். 


கோபம்னா என்ன? 


கோபம் என்பது 

அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு 

நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனைக்கு பெயர் தாங்க கோபம்.


அதுமட்டுமல்லாமல்.. 


நாம் நம் கோபத்தை குறைக்க அடுத்தவர்களிடம் 


இதே கோபத்துடன் செயல்பட்டால் 


நட்பு நசுங்கி விடும். 

உறவு அறுந்து போகும். 

உரிமை ஊஞ்சலாடும்.


நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை என்ன?


சவுக்கு எடுத்து சுளீர்...சுளீர்ன்னு நம்மளையே அடித்துக்கொண்டால் மட்டும் அதுக்கு பெயர் தண்டனை இல்லீங்க. 


கோபம் ஏற்படுவதால் பதட்டம்( டென்ஷன்) உண்டாகிறது.


இதனால் நமது உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுகிறது. 


இந்த பாதிப்பால் நரம்புத்தளர்ச்சி, 

ரத்த அழுத்தம், மன உளைச்சல், நடுக்கம் போன்ற உபாதைகள் உண்டாகிறது. 


இதை தடுக்க டாக்டரிடம் சென்று மாத்திரை மருந்து சாப்பிடுவோம். 

இதே நிலை நீடித்தால் 

ஒரு மன நோயாளி போல் ஆகி விடுவோம்.


இது பொய்யல்ல. 

சத்தியமான உண்மை இது. 


இதெல்லாம் நீங்க சொன்னீங்க...

உண்மை மாதிரி தான் தெரியுதுன்னு 

நீங்க சொல்றதும். 


அப்படியே கோபத்தை குறைக்கறதுக்கும் வழி சொன்னீங்கன்னா நல்லாயிருக்குமேன்னு புலம்புறதும் புரியுது... 

அப்படி வாங்க வழிக்கு. 


அன்பின் வேறொரு விதமான வெளிப்பாடுதான் கோபம். 


முதல்ல அடுத்தவங்களுக்கு கோபம் வர்ற மாதிரி நீங்க நடக்காதீங்க. 


அடுத்தவங்கள குறை சொல்லாதீங்க. எதையும் அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காதீங்க. 


அவங்க உங்க மேல கோபப்பட்டா முதல்ல சாரின்னு மன்னிப்பு கேளுங்க... 


ஈகோ பார்க்காதீங்க... 


நீங்க கோபப்படுற மாதிரி அடுத்தவங்க நடந்து கொள்கிறார்கள் என்று வைத்து கொள்வோமே. 


முதல்ல பிளீஸ் என்னை கொஞ்சம் யோசிக்க விடுங்கன்னு அமைதியாயிடுங்க. 

யார்மேல தவறுன்னு சிந்தியுங்க...


கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாயிடும்.

அப்படி இல்லைன்னா 

அந்த இடத்தை விட்டு நகருங்க...


தனியா உக்காந்து யோசிங்க. 

அடிக்கடி யாரிடம் கோபப்படுகிறீர்களோ அவர்களிடம் மனம் விட்டு சந்தோஷமாக சிரித்து பேசுங்கள். 


அடுத்தவர்களே தவறு செய்திருந்தால் கூட நீங்க நல்லது பண்ணுங்க. 


அடுத்தவங்க என்ன செஞ்சுட்டாங்கன்னு கோபப்படுறோம். 

என்ன நடந்துருச்சு பெருசா. 

என்னத்த இழந்துட்டோம். 

மரணம் ஒன்று தான் மாபெரும் இழப்பு. 


அதை தவிர வேறொன்றுமே இழப்பு கிடையாது. 

எல்லாத்தையும் சமாளிச்சுடலாம்ங்ற முடிவுக்கு வாங்க. 


வீட்டு பெரியவர்கள் திட்டும் போது கவனித்திருப்பீர்கள் 

என்னத்த பெரிசா சாதித்து கிழிச்சன்னு.


நாட்காட்டியில் உள்ள தேதி பேப்பரைக் கிழிச்சால் மட்டும் போதாது. 


ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லும் முன் இன்றைக்கு என்ன சாதிச்சோம்னு யோசிச்சிட்டு தூங்குங்க. 


அடுத்தவர்களுக்கு நல்லது பண்ணாட்டியும் கோபம்ங்ற கொடிய நோயைப் பரப்பாமல் இருந்தாலே,

நீங்க 

அவங்களுக்கு நல்லது செஞ்ச மாதிரிதான்.


தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்பவன் கூட. 

ஒரு செகண்ட் யோசிச்சான்னா தனது முடிவை மாற்றிக்கொள்வான்.


நமக்கோ ஆறு அறிவை ஆண்டவன் கொடுத்துள்ளான். 

இதில் ஆறாவது அறிவை 

அப்பப்ப யோசிக்கிறதுக்கு யூஸ் பண்ணுங்க...


கோபம் வரவே வராது. 


நாமெல்லாம் சாதிக்கப்பிறந்தவர்கள்.


கோபப்படாமல் இருப்பதே ஒரு மாபெரும் சாதனை தான். 


வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான். அதை கோபப்படாமல் சிறந்த முறையில் வாழ்ந்து சாதிப்போம்.

கலியுகம் ! நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள் !...

கலியுகத்தில்

நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!...


5000 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய முன்னோர்கள்

நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர். இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள். 


பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன.


5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.

மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும்.

  

1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும்.

[பாகவத புராணம் 12.2.1]


2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும்.

மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை.

மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும்.

[பாகவத புராணம் 12.2.2]


3. ஆண்களும் பெண்களும் வெறும் உடலுறவுக்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள்.

தொழில்துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும். 

[பாகவத புராணம் 12.2.36)


4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள்.

கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலிகுருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள்.

வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார்.

[பாகவத புராணம் 12.2.4]


5. கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர்.

குளிப்பதாலும் அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமேஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான்.

[பாகவத புராணம் 12.2.5]


6. அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்றறியப்படுவான்.

முரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும். 

வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். 

பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும்.

[பாகவத புராணம் 12.2.6]


7. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர். 

தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான். 

[பாகவத புராணம் 12.2.7]


8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும்.

இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள்.

(அரசின் அலட்சியப் போக்கினால்)     கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக்கொள்வார்கள்.

[பாகவத புராணம் 12.2.9]


9.கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள்.

இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங்களிலும்சிக்கிக் கொள்வார்கள்.

[பாகவத புராணம் 12.2.10]


10. கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 50 ஆண்டுகளாக குறையும்.

[பாகவத புராணம் 12.2.11]


 11. தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான். 

[பாகவத புராணம் 12.3.42]


12. பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான். நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான்.

[பாகவத புராணம் 12.3.41]


13. வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள்.

தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள்.

தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள். [பாகவத புராணம் 12.3.38]


14. தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான்.

இத்தனை காலம் பால்கொடுத்தபசு பால் கொடுப்பது குறைந்துவிட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும். நன்றிகடன் மறக்கப்படும். [பாகவத புராணம் 12.3.36]


15. நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடுகளைப் பரப்ப பொய்யான முறையில் மொழிப்பெயர்க்கப்படும்.

       அரசியல்வாதிகள் மக்களை மெல்ல மெல்ல பல விதமாக கொடுமை செய்வார்கள். 

போலி ஆசாரியர்கள் தோன்றி பக்தர்களை உபயோகப்படுத்தி தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள்.

   [பாகவத புராணம் 12.3.32]

************


   கலியுகம் துன்பங்கள் நிறைந்தது. 

ஆனாலும் நான்கில் ஒரு பங்கு தர்மம் உள்ளது. 


கலியுக துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கண்டிப்பாக நமக்கு ஈஸ்வரனின் துணை தேவை.

               மழையினில்குடைபோல, இறைவனிடம் காட்டும் பக்தி இத்துன்பங்கள் நம்மீது படாமல் பாதுகாக்கும்.


மனத்தை உறுதியாகவைத்துக் கொள்ள தியானமும், உடலை வலிமையாக வைத்துக் கொள்ள யோகமும், செயலை தூய்மையாக வைத்துக் கொள்ள சுயநலமற்ற சேவைகளும் புரியவேண்டும்.


கலியுக துன்பங்களில் நம்முடைய தர்மங்களை மறந்துவிட கூடாது. கலியுகத்தின் நடுவில் ஒரு பொற்காலம் மலரும் என கூறப்படுகின்றது.


இப்போது நாம் எல்லோரும் அந்த பொற்காலத்திற்காக உலகத்தை தயார் செய்யவேண்டும்.

 அனைத்தையும் அச்சமின்றி மிகவும் துணிவாக எதிர்கொள்ளவேண்டும்! மிகவும் தெளிவான சிந்தனையோடு செயல்படவேண்டும். ஒருபோதும் கடவுளை மறவாமல் இருக்கவேண்டும்

KARMA !

 கர்ம வினை !


 உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு.  


       ஆனால் எதோ ஒரு குறிப்பிட்ட நபர் நமக்கு துணைவராக அல்லது துணைவியாக

அமைவது ஏன் ?

 

    நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் 

ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம். 


  அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம். 


   சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம். 


      சிலருக்கு நல்லது செய்கிறோம்.

பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக

 நன்மைகளைப்பெற்றுக் கொள்கிறோம். 

இந்த கொடுக்கல் வாங்கலே "ருண பந்தம்" 

எனப்படுகிறது.

 

     சிலருடைய உறவுகள் ஆனந்தத்தைக் கொடுக்கிறது. 

சிலருடைய வருகை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. 


     சிலர் கூடவே இருந்து தொல்லைப் படுத்துகிறார்கள்.


சிலரின் வருகை துக்கத்தை ஏற்படுத்துகிறது. 


     பல சமயங்களில் இது ஏன் நிகழ்கிறது  என்று தெரியாமலேயே  தன் போக்கில்  நம் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 


     கனவில் கூட காண முடியாத  பல ஆச்சர்யங்கள் நமக்கு  சிலசமயங்களில் ஏற்படுகிறது.

 

இதற்கெல்லாம் என்ன காரணம் ? 

 

ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ?

 

    நாமே நம் தாயை, தந்தையை, 

சகோதர சகோதரிகளை,  நண்பர்களை, மனைவியை, கணவனை, பிள்ளைகளை,  தேர்ந்தெடுப்பதில்லை.


    நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம்  என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும் 

தானே நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது. 


முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு ? .


    ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று காணாமல் போய் விடுவர்.


     அது இறப்பால் மட்டும் அல்ல ,  பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும்  நம் வாழ்வில் வேறு கோணத்தில் 

#வேறு_பார்வையில் தோன்றுவர்.

 

   எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது, அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது. 


     அது என்ன ? 

சமன் செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும் 

கர்ம கதிகளின் 

எச்சங்களே அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை  ஏற்படுத்துகிறதா ?


 இதற்கெல்லாம் தெரிந்த ஒரே காரணம் நம்முடைய  "கர்ம வினை" தான் .

 

    இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம்.


 அத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம்.  


    அந்தக் கூட்டின் பெயரே "சஞ்சித கர்மா" எனப்படுகிறது.  அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே 'பிராரப்தக் கர்மா' எனப்படுகிறது.


     இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல்

நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது.

நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது.

 

    இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம் 

ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம் அல்லது கற்றுக்கொடுக்கிறோம்.


இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே.

 

     இது தவிர 'ஆகாம்ய கர்மா' என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல - கெட்ட செயல்களால் ஏற்படுவது. 

யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ  உருவாக்கவோ முடியாது.


     அவரவர்கள் செய்வினையின் 

பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும் 

வாழ்க்கை அமையும் .

 

    துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும்,  ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும்,  அவரவர்கள் கர்ம கதியே.


 இதைத் தான் "தீதும் நன்றும் பிறர் தர வாரா"

என நம் மதம் போதிக்கிறது.

 

    நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு 

நாம் மட்டுமே பொறுப்பு.


 அப்படி என்றால் 

ஆகாமி கர்மா நம்முடைய கையிலேயே இருக்கிறது.  


   இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும்,  நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன்  கையிலேயே உள்ளது. 


     நீ செய்யும் நற்செயல்களையும்,  வினைச் செயல்களையும் நீ மட்டுமே எதோ  ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய்  என்பதை உணர்ந்தால்,


நீ என்ன செய்யப் போகிறாய் ?


எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ? 


எது போன்ற வாழ்க்கைத் தடத்தை 

ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது 

உனக்குப் புலப்படும்.


இதை போதிப்பது தான் "ஆன்மீகம்"

 

பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது.  இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும்.

 

 பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும் 

தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது. 


    ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான். 


அதேபோல பெரும் பணக்காரர்களையும்  'துக்கங்கள்' விடுவதில்லை.

 

சர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic-

ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை 

உண்ண முடியாது. 


பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தனதுகால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது.

 

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

'வினை விதைத்த வழியில் விதி நடக்கும்' 

'விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்'

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

 

    நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச் 

செய்வது மட்டுமே. பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம்.  


நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். 


அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் துன்பத்தையும் சோகத்தையுமே பலனாகப் பெறுகிறோம்.

 

எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை.

 

    நமக்கு நடக்கும் நடக்கப்போகும் நல்லதை யாராலும் கெடுக்க முடியாது. அதேபோல் தீமையையும்

 கொடுக்க முடியாது🙏

தேவ ரகசியம்...

ஒரு தாய் அப்போதுதான் ஒரு குழந்தையை பிரசவித்திருக்கிறாள். அந்தக் குழந்தையின் தந்தை ஒரு வாரத்துக்கு முன்னால்தான் இறந்து போனான்.


எமதர்மன் ஒரு எமதூதனை அனுப்பி அந்த அம்மாவுடைய உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு.." என்கிறான்.


இந்த எமதூதன் நினைக்கிறான், 

"ஐயோ பாவம் அப்பாவும் இல்லை, அம்மாவையும் நான் எடுத்துக்கொண்டு போய்விட்டால்  இந்த குழந்தைக்கு யார் கதி.." என்று எடுக்காமல் திரும்பி விட்டான். ஆக, எமதூதன் அந்த குழந்தைக்கு யார் கதி என்று நினைத்து பரிதாபப்பட்டதனில் உயிரை எடுக்காமல் போய்விட்டான்.


ஆனால், அங்கே எமன் சொல்லிவிட்டார்,  "உனக்கு தேவலோக ரகசியங்கள் தெரியவில்லை... கடவுளுடைய அருளாட்சி எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. அது தெரிகிற வரைக்கும் பூமியில் போய் கிட.." என்று அவனை தூக்கி பூமியில் போட்டுவிட்டார்.


அவன் ஒரு பூங்காவில் முனகிக் கொண்டு கன்னங்கரேலென்று கிடக்கிறான். அப்போது அந்த வழியாக வருகிற ஒரு தையற்காரன், என்னடா இது,  இங்கே முனகல் சத்தம் கேட்கிறதே என்று அவனைப்பார்த்து விட்டு, இவனிடம் இருந்த துணியை அவனுக்கு போடுகிறான். மேலும் "என்னுடன் வா என்கிறான்...." 


எமதூதன் ஒரு வார்த்தை பேசவில்லை.

தையற்காரனுடன் அவன் வீட்டுக்குச் சென்றான். திண்ணையில் எமதூதனும்,  அந்த தையற்காரனும் படுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த தையற்காரனின் மனைவி தையற்காரனை மட்டும், "வா..வா வந்து கொட்டிக்கோ.."  என்று கூப்பிடுவாள்.

அவன் "விருந்தாளி வந்திருக்கிறானே.." என்று சொல்வான். அவள் கணவனை திட்டி விரட்டுவாள்.


விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று".  


எமதூதன் ஒன்றும் சொல்ல மாட்டான். போய்க் கொண்டே இருப்பான். ஒரு பத்து நிமிடம் கழித்து இவள் "சரி..சரி..வா"  என்று எமதூதனை  மறுபடியும் கூப்பிடுவாள். 


அப்போது அவன் லேசாக சிரிப்பான். கன்னங்கரேலென்று இருந்த அவன் உடம்பு கொஞ்சம் பொன்னிறமாக மாறும். ஆனால் ஒன்றும் பேச மாட்டான்.


தையற்காரன் சொல்வான், "எனக்கு இந்த காஜா போடுவதற்கு பட்டன் தைப்பதற்கு எல்லாம் ஆளில்லை . தங்குவதற்கு இடமும் சாப்பாடும் போடுகிறேன். எங்கள் வீட்டில் இருந்து கொள்" என்று சொன்னான்.


எமதூதன் டெய்லரிங் அசிஸ்டண்ட் ஆகிவிட்டான்....😆


ஒரு பத்து வருடம் ஆகிறது. ஒரு குதிரை வண்டியில் ஒரு பணக்கார பெண்மணி கை கொஞ்சம் முடமாக இருக்கிற குழந்தை, அத்துடன் ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தை என இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு வந்து தையற்காரனிடம், இந்தக் குழந்தைக்கு நல்லா தளர்வாக தைக்க வேண்டும். கை கொஞ்சம் சரி இல்லாமல் இருக்கிறது.." என்று சொல்வாள்.


எமதூதன் அந்த குழந்தையையும் பார்ப்பான். அந்த பணக்கார பெண்மணியையும் பார்ப்பான். சிரிப்பான். அவன் உடம்பு இன்னும் கொஞ்சம் பொன்னிறமாக மாறும்.


இன்னும் ஒரு ஐந்து வருடம் ஆகிவிடும்.


ஒருநாள் ஒரு பெரிய பணக்காரன் பென்ஸ் காரில் வருவான். வந்து "இந்தாங்க பத்து மீட்டர் துணி இருக்கிறது. இதிலே 20 வருஷம் தாக்குப் பிடிக்கிற மாதிரி சூப்பராக சபாரி சூட் தையுங்கள்..." என்று சொல்லி கொடுத்து விட்டுப் போவான்.


அதற்குள் நம் எமதூதன் தேர்ந்த தையற்காரன் ஆகிவிடுகிறான்....


முதல் நாள் போய்விட்டது.....

இரண்டாம் நாள் போய்விட்டது....


தையற்காரன், "நாளை டெலிவரி, அந்த பணக்காரன் வந்து கேட்பான்,  என்ன சொல்வது..?"  என்று கேட்கிறான்.


இவன் டர்ரென்று  அந்த பேண்ட் துணியை கிழிப்பான். ஒரு தலையணை உறை, பெட் கவர் தைப்பான். தையற்காரன் திட்டுவான்.." என் பிழைப்பில் மண்ணை போடுவதற்கு வந்தாயா..? இப்போது அவன் வந்து கேட்டால்  நான் என்ன பண்ணுவது..?" என்பான்.


அப்போது கார் டிரைவர் ஓடி வருவான்.  "நீங்கள் சபாரி தைக்காதீர்கள்.. என் முதலாளி இறந்து விட்டார். அதனால் அவருக்கு ஒரு தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்து விடுங்கள்.."  என்று சொல்வான்.


இவன் முகத்தில் சிரிப்பு வரும் முழுவதும் பொன்னிறமாக மாறி விடுவான்.

அப்படியே மேலே போவான்.


அப்போது தையற்காரன்  சொல்வான், "அப்பா நீ யார்..? வாழ்க்கையில் இதுவரைக்கும் மூன்று முறைதான் சிரித்தாய். ஒவ்வொரு தடவை சிரிக்கிற போதும் உன் உடம்பு பொன்னிறமாக மாறியது. அதனால் அதற்கு விளக்கத்தை சொல்லிவிட்டு,  நீ போ.." என்பான்.


அவன் "நான் எமனுடைய தூதுவன். ஒரு தாய் இறந்து விட்டாள், அந்த குழந்தைக்கு யார் கதி என்று அந்த தாயின் உயிரை எடுக்காமல் விட்டதனால் பூமியில் போய் தேவ ரகசியத்தை தெரிந்து கொண்டு வா.." என்று அனுப்பினார்கள். அதனால் வந்தேன்.


"என்ன தெரிந்து கொண்டாய்..?"  என்று இவன் கேட்பான்.


□முதல் நாள் உன் மனைவி என்னை அடிக்க வந்தாள் அல்லவா...? அப்போது அவள் முகத்தில் தரித்திர தேவி தெரிந்தது.


□பத்தாவது நிமிடம் என்னை சாப்பிட வாவா என்று கூப்பிடும் போது அன்னை மகாலட்சுமி தெரிந்தார்.


■□ அப்போது, இந்த உலகத்தில் "ஒருவன் பணக்காரன் ஆக இருப்பதற்கும்  ஏழையாக இருப்பதற்கும் அவனுடைய எண்ணங்கள்தான் காரணம்"  என்று தெரிந்து கொண்டேன். இது போய்விட்டு அது வருவதற்கு பத்து நிமிடம் தான் தேவை என்றும் தெரிந்து கொண்டேன்.


□ இதுதான் தேவரகசியம் ஒன்று..


மனிதர்களிடமே  பெரிய திட்டங்கள் எல்லாம் இருக்கிறது.  ஆனால் எந்த கார்டை வைத்து விளையாடுவது என்று தெரியாததினால்  வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள்.


■ பத்து வருடம் கழித்து ஒரு பணக்கார பெண்மணி குதிரை வண்டியில் வந்தாள் அல்லவா...? அவளுடன் ஒரு குழந்தை கை முடமாக வந்தது அல்லவா...?

அதுதான் நான் இதற்கு அம்மா இறந்து விட்டால் யார் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்த குழந்தை.


நிஜமான தாய் ஏழை. அவள் இறந்து விட்டால் கூட இந்த குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்வதற்கு,  இதற்கு கொஞ்சம் தளர்வாக தைக்கவேண்டும் என்று சொல்கிற அளவிற்கு ஒரு பணக்கார அன்பான அம்மாவை இறைவன் தயாராக வைத்திருக்கிறான்.  இது எனக்கு தெரிந்த போது இரண்டாவது முறை சிரித்தேன்.


■ ஒரு எமதூதன் ஆகிய எனக்கே பச்சாதாபம் இருக்கிறபோது, இறைவனுக்கு இருக்காதா? அவன் அதற்கு ஒரு மாற்று வழி வைத்துக் கொண்டுதான் அந்த உயிரை எடுப்பான். இது எனக்கு தெரிந்தபோது இரண்டாவது தேவ ரகசியம் புரிந்தது.


கடவுள் எல்லாம் காரண காரியங்களோடு நடத்துகிறான்.


■மூன்றாவது தேவ ரகசியம்....  

மூன்று நாட்களில் சாகப் போகிறவன் இன்னும் 20 வருஷம் நான் உயிரோடு இருக்கப் போகிறேன் என்று நினைத்துக்கொண்டு,  நன்றாக 20 வருஷத்திற்கு வருகிற மாதிரி துணி தை என்று சொன்னானே...

"எனக்கு தெரியும் அவன் சாகப்போகிறான்" என்று,  அதனால்தான் நான் துணி தைக்கவே இல்லை.


அவன்  இறந்த அந்த நேரத்தில் துணியை கிழித்து தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்தேன்".


இந்த ஜனங்கள் இந்த உலகத்தில் ஏதோ நூறு வருஷம் இருநூறு வருஷம் கொட்டகை போட்டுக் கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.


சாவு எப்போது வேண்டுமானாலும் வரலாம்.


நேற்று இருந்தவன் இன்று இல்லை. அதுதான் இந்தக் கலியுகத்தின் எதார்த்தமான உண்மை...


அதுவே தெரியாமல் ஒவ்வொருவனும் நான் மட்டும் ரொம்ப வருஷம் இருப்பேன் என்றும்,  மற்றவன்தான் செத்துக் கொண்டிருக்கிறான் என்றும் நினைக்கிறான் அல்லவா?

அதுதான் மூன்றாவது ரகசியம்...


● அதனால்தான் இந்த உலகத்தில் அவன் திறமையாக செயலாற்ற முடியாமல் இன்னும் 20 வருஷம் கழித்து நடக்கப் போகிற குழந்தையுடைய கல்யாணத்திற்கு இன்றைக்கு காசு இல்லையே என்று வருத்தப்படுகிறான்..


● இன்னும் 15 வருடம் கழித்து கல்லூரியில் படிக்கப்போகிற பையனுக்கு பணம் இல்லையே என்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறான்..


அதனால்தான் உலகத்தில்  நிம்மதி இல்லாமல் இருக்கிறது. பேசிக் கொண்டிருக்கிறபோது இப்போதே செத்துப் போவோம், என்று நினைத்தால், நீ சந்தோஷமாக இருப்பாய்..


இந்த மூன்று ரகசியங்கள்...


அதாவது ஏழையாக இருப்பதும் பணக்காரன் ஆக இருப்பதும் நம்முடைய எண்ணங்களால் நடக்கிறது.


இரண்டாவது எது நடந்ததோ அதற்கு கடவுள் ஒரு மாற்றுவழி வைத்திருப்பார்.

மனிதனின் மனநிலையில் உள்ள ஈகோவினாலும்,  அறியாமையினாலும் அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.


மூன்றாவது எந்த நேரத்திலும் சாவு வரலாம்.

இது தெரியாமல் மனிதர்கள் கொட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அஞ்ஞானம்தான் உலகில் துக்கங்களுக்கு எல்லாம் காரணம்.


இவைதான் அந்த மூன்று தேவ ரகசியங்கள் என்பான்....


எனவே, நாமும் இந்த தேவ ரகசியங்களை புரிந்து கொண்டு வாழப் பழகி விட்டால், நம் உடலில் உயிர் இருக்கும் வரை நிம்மதியாக வாழலாம்...


பாசிட்டிவ்வாக இருப்பவர்களோடு பழகுங்கள்

நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள்.


"தெரியாது', "நடக்காது', "முடியாது' , "கிடைக்காது' என சொல்பவர்களை விரட்டி விடுங்கள்.


உற்சாகமாக இருங்கள்

சோகத்தை விட்டொழியுங்கள். 

எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள்.

இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்து விட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.


பவர்ஃபுல்லாக உணருங்கள்

உடல் வலிமை, 

பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி 

மனவலிமை மிக முக்கியம்.

உங்களைப் போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. 

உடனே சிரிக்காதீர்கள். இது தான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை.


உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ்.


நேசியுங்கள்.

உங்களை நீங்களே நேசியுங்கள். 

இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது.

உங்களை உங்களுக்குப் பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள்.


உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்குப் புரிய வையுங்கள்.


உங்களைப் போல அழகானவர் யாரும் இல்லை, 

உங்களைப் போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே, நீங்களே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.


பயணப்படுங்கள்.

வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது. 

இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றி எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும். அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.


வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது. ஆனால் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும், உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்🌹🌹


 வாருங்கள் வரும் காலம் நம் கையில்

நிலக்கடலையின் அற்புத பலன்கள்

The amazing benefits of peanuts 

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.


நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.


நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.


நீரழிவு நோயை தடுக்கும்:


நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது.மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும்உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். 

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:


நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.


இதயம் காக்கும்:


நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்துநிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.


இளமையை பராமரிக்கும்


இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.


ஞாபக சக்தி அதிகரிக்கும்:


நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.


மன அழுத்தம் போக்கும்:


நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது.செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது.மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது

கொழுப்பை குறைக்கும்

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும்நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை.மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது.


இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:


உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.


கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள்நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.


கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:


பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.


நிறைந்துள்ள சத்துக்கள்:


100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.


கார்போஹைட்ரேட்- 21 மி.கி. 

நார்சத்து- 9 மி.கி. 

கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி. 

புரதம்- 25 மி.கி. 

ட்ரிப்டோபான்- 0.24 கி. 

திரியோனின் – 0.85 கி 

ஐசோலூசின் – 0.85 மி.கி. 

லூசின் – 1.625 மி.கி. 

லைசின் – 0.901 கி 

குலுட்டாமிக் ஆசிட்- 5 கி 

கிளைசின்- 1.512 கி 

விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி 

கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி. 

காப்பர் – 11.44 மி.கி. 

இரும்புச்சத்து – 4.58 மி.கி. 

மெக்னீசியம் – 168.00 மி.கி. 

மேங்கனீஸ் – 1.934 மி.கி. 

பாஸ்பரஸ் – 376.00 மி.கி. 

பொட்டாசியம் – 705.00 மி.கி. 

சோடியம் – 18.00 மி.கி. 

துத்தநாகச்சத்து – 3.27 மி.கி. 

தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம். 

போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.


பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:


நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.


கர்மவினை தான் நோய்கள் தோன்ற காரணம் - அகத்தியர் சித்தர்

விதியைப் பற்றியும், கர்மவினை பற்றியும் உலகம் முழுவதும் பரவலான நம்பிக்கை மக்களிடையே இருந்து வருகின்றது.''


இதில் நோய்கள் தோன்றுவதே கர்மவினையால் தான் என்பதனை  சித்தமருத்துவம் ஆதாரங்களுடன் விளக்குகின்றது.


சித்தர் அகத்தியர் பெருமான் இயற்றிய பல லட்சம் பாடல்களில் "அகத்தியர் கன்ம காண்டம் -300" என்ற சிறப்பு வாய்ந்த நூலில் எந்த வித கர்ம வினையினால் என்னென்ன நோய்கள் தோன்றும் என மிகத்தெளிவாக விளக்கமளிக்கின்றார்.


ஒருவரிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காத பாபத்தால் "ஈளை நோய்" வரும். [ ஈளை, இளைப்பு, ஆஸ்த்மா ]


பசுமையாய் வளர்ந்த இளம் செடி,கொடிகளை வெட்டுவதும்,சிறு பூச்சிகளின் கை, கால்களை வெட்டினால் "வாதநோய் - பக்கவாதம்" வரும்.


பிறர் குடியை கெடுத்தல்,நல்லோர் மனதை நோகச் செய்தல், பிறர் பசியில் இருக்க அவர் பார்வையில் தான் உணவு உண்டால் வரும் நோய் "குன்மநோய் எட்டு" அதாவது அல்சர், குடற் புண்


,இதில் எட்டு வகை நோய் வரும்.[இன்று ஏராளமான பேருக்கு இந்நோய் உள்ளது]


மலராத அரும்பு பூக்களை கொய்தல், நந்தவனம் அழித்தல், பெற்றோர் மனம் நோகச் செய்தல் இதனால் "குஷ்ட நோய்" வரும்.


ஊர்ந்து செல்லும் சிறு விலங்குகள்,பறவைகள் போன்றவைகளைக் கொன்றால் வரும் நோய் "வலிப்பு நோய்" ஆகும்.


பிஞ்சு காய்கறிகள், இலை தழை பறித்தல்,பட்டை வெட்டுதல்,வேர் மற்றும் கொடிகள் வெட்டுவதால் பீனிசம்,[சைனஸ்],"ஒற்றைத் தலை வலி, மண்டைக்குத்து, மண்டைக் கரப்பான்" போன்ற நோய்கள் வரும்.

இளம் பயிரை அழித்தல், விந்து அழித்தல், கன்றுக்குரிய பாலைக் குடித்தல்,இதனால் "குழந்தையின்மை" குழந்தை பிறக்காது.


வீண் வம்பு பேசுதல், பிறரைப் பழித்தல், பொய் பேசல், ஆங்காரம் , ஆணவம் போன்ற வற்றால் "சோகை ,பாண்டு" [இரத்த சோகை, கல்லீரல் மண்ணீரல் வீக்கம்] நோய் வரும்.


உயிர்களை வதைத்தல்,ஊன் தின்னல், நன் மங்கையரைக் கற்பழித்தல், பிறர் செய்யும் புண்ணிய காரியங்களைக் கெடுத்தல், குடிநீரைக் கெடுத்தல் போன்றவற்றால் "கிராணி, கழிச்சல்",[சீத பேதி] நோய் வரும்.


பொய் மிக பேசல், பிறரை திட்டுதல், வஞ்சகம் பேசுதல்,கொடுத்த வாக்கை மறுத்தல், விஷமிடல் போன்றவற்றால் "கண், கன்னம், வாய்" பல் போன்றவற்றில் பல வகை நோய் வரும்.


சற்குருவை தூற்றுதல், வழியிலே முள்ளிட்டு வைத்தல் இவற்றால் "வண்டுகடி, ஊறல், கரப்பான்" நோய் வரும்.


வெடி வைத்தல், கல்லெறிதல், சிவ யோகிக்கு சினம் உண்டாக்குதல் இதனால் பிளவை எனும் "இராஜபிளவை" முதுகு தண்டில் வரும்.


பெண்களை மோகக்கண் கொண்டு, காம எண்ணத்துடன் உற்றுப் பார்த்தல்,கோழி ,ஆடு போன்றவற்றை வெட்டும் போது பார்த்தல், ஆலயம் செல்ல விரும்பாமை,தெய்வ நிந்தனை போன்றவற்றால் "கண்நோய் 96" - வகைகள் தோன்றும்.


இந்த கர்மவினைகளை தீர்க்கும் சித்த வைத்தியர்களின் உடல் நலம் பாதிக்கும் இது உண்மையே...


ஏன் என்றால் பலரின் கர்மவினைகளை நீக்கி மருத்துவம் செய்து கர்மவினையால் ஆன பிணிகளை நீக்கினால் இயற்கை விதி மீறலை போன்றதாகும்.....


சித்த மருத்துவம் அவ்வளவு எளிது இல்லை உயிர் தியாகம் கூட செய்ய தயாராக இருக்க வேண்டும் மக்களுக்காக...


பல விதமாக நோய் உருவாகும் போது இது கர்மவினை என்று அறிந்து, இனியாவது வினைகளை சேர்க்காமல் தான தர்மங்களை செய்து வாழ்வோம்

எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!

இதோ👇


1. கருப்பு கவுணி அரிசி

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. மாப்பிள்ளை சம்பா அரிசி :

நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

3. பூங்கார் அரிசி :

சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

4. காட்டுயானம் அரிசி :

நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

5. கருத்தக்கார் அரிசி : 

மூலம்,  மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 

6. காலாநமக் அரிசி :

புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 

7. மூங்கில் அரிசி:

மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 

8. அறுபதாம் குறுவை அரிசி :

எலும்பு சரியாகும். 

9. இலுப்பைப்பூசம்பார் அரிசி :

பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 

10. தங்கச்சம்பா அரிசி : 

பல், இதயம் வலுவாகு ம்            

11 கருங்குறுவை அரிசி : 

இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 

12. கருடன் சம்பா அரிசி :

இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

13. கார் அரிசி :

தோல் நோய் சரியாகும். 

14. குடை வாழை அரிசி : 

குடல் சுத்தமாகும். 

15. கிச்சிலி சம்பா அரிசி : 

இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். 

16. நீலம் சம்பா அரிசி : 

இரத்த சோகை நீங்கும். 

17. சீரகச் சம்பா அரிசி :

அழகு தரும்.  எதிர்ப்பு சத்தி கூடும். 

18. தூய மல்லி அரிசி :

உள் உறுப்புகள் வலுவாகும். 

19. குழியடிச்சான் அரிசி :

தாய்ப்பால் ஊறும். 

20. சேலம் சன்னா அரிசி : 

தசை, நரம்பு,  எலும்பு வலுவாகும். 

21. பிசினி அரிசி : 

மாதவிடாய்,  இடுப்பு வலி சரியாகும். 

22. சூரக்குறுவை அரிசி :

பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். 

23. வாலான் சம்பா அரிசி :

சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும்.  ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 

24. வாடன் சம்பா அரிசி : 

அமைதியான தூக்கம் வரும்

25. திணை

உடலுக்கு வன்மையை கொடுக்கும்.வலிமையை பெருக்கும்.உடலை வலுவாக்கும்.

26. வரகு

உடல் பருமன் குறைக்கும்.மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும்

27. சாமை

காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும்.வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும்.

28. குதிரைவாலி 

தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும்.

39. கை குத்தல் 

உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.

30. சிவப்பு காட்டு அரிசி 

இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

31. சிவப்பு அரிசி 

கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

32. குள்ளகாற் அரிசி 

இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்.

இதுதான் வாழ்க்கையின் உண்மை...

 இது  ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை ஆத்மவிலாசம்


உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள் அவர்களைப் பற்றி கவலைப்படாதே.


நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும்

இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.


ஒன்றை மட்டும் தெரிந்து கொள் ஒவ்வொரு மனிதனும் தனித்தனி ஜென்மங்கள். அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்.

அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே.

அவர்கள் போகும் வரை போகட்டும்.போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் .

அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும்.


அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.


இதுதான் வாழ்க்கையின் உண்மை.


அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.


அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும்,

நண்பர்களாக இருந்தாலும்,

கணவன் ,மனைவியாக ,இருந்தாலும், பெற்ற

குழந்தைகளாக இருந்தாலும்,

பேரன் பேத்திகளாக இருந்தாலும்,

உறவுகளாக இருந்தாலும்,

அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது. எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.  இதை நீ மாற்றி அமைக்க முடியுமா?


ஒதுங்கி நின்று வேடிக்கை பார். பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.


அவர்களுக்கு அனுபவம் தான் குரு.

அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு.


செயற்கையாக ஒரு குணத்தை  உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் 

தான் யார் ?,தன் குணம் என்ன ?,என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். 


எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.


நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம்.


அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதைத் தவிர வேறு எதையும் செய்து காட்ட முடியாது.


எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள்.

என்று புலம்பிக் கொண்டு இருக்காதே.


கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் இறைவன்.


அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது.


இயற்கையின் சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.


நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப் பழகிக் கொள். 


அதில் நன்மை வந்தாலும் ,தீமை வந்தாலும் ,உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் .

அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.


இன்பமானாலும் துன்பமானாலும்

அதை நீயே சந்திக்க கற்றுக்கொள்.


அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.


உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல்

உன்னோடு சேர்ந்தே பயணிப்பார்.அது உன் பிறவி  பிராப்த்தை பொறுத்து இருக்கிறது. அப்படி அது நடந்து விட்டால்


எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்,


பெண்ணாக இருந்தாலும் ,ஆணாக இருந்தாலும் ,வரும் துன்பத்தை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.


மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.


உன் கண்ணீரும் உன் கவலையும்

உன்னை பலகீனமாக காட்டிவிடும்.


அழுவதாலும்

சோர்ந்து போவதாலும்

ஒன்றும் நடக்கப்போவதில்லை.


எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும்.


அழுது சுமப்பதை காட்டிலும்.

ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.


தைரியமும் தன்னம்பிக்கையும் தான் 

ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் .

என்ற உண்மையை உணர்ந்துகொள்.


இந்த பக்குவத்தை அடைந்துவிட்டால்

 எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.

Saturday 1 February 2020

உறவுகள் தொடர்கதை!!!

‘‘உறவுகளை நான் பெருசா நினைக்கிறதில்ல, மதிக்கிறதில்ல. பெரிய என் உறவு வட்டத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டே வந்தேன். அதை `மாடர்ன் லைஃப் ஸ்டைல்'னு நான் நினைச்சேன்.

 சமீபத்தில், என் தோழி ஒருத்தியோட வீட்டு கிரகப்பிரவேச விழாவுக்குப் போயிருந்தேன். அவளோட மூன்று தலைமுறை உறவுகளோடும் அவ அரவணைப்பிலேயே இருந்ததோட, விழாவுக்கு அத்தனை பேரையும் வரவழைச்சிருந்தா. அவங்களோட சந்தோஷம், நல விசாரிப்புகள், கேலி, கிண்டல், உரிமை, கடமைனு விழாவே அமர்க்களப்பட்டுப்போனது.

‘உங்க தாத்தாவும் நானும் பெரியப்பா மகன் - சித்தப்பா மகன்’னு தாத்தா ஒருவர் பேரனுக்கு உறவு முறையை விளக்கிக்கொண்டிருக்க, ‘வாட்ஸ்அப்ல இருக்கியா? இனி லெட்ஸ் ஸ்டே இன் டச்!’னு ஒருவருக்கொருவர் அலைபேசி எண்கள் பரிமாறிட்டு இருந்தாங்க இந்தத் தலைமுறை இளைஞர்களும், இளம் பெண்களும்!

‘நீ மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் முடிச்சிருக்கேனு ஏன்ப்பா எங்கிட்ட சொல்லல? நான் ஆட்டோ மொபைல் கம்பெனி ஹெச்.ஆர்ல இருக்கேன். உன் ரெஸ்யூம் ஃபார்வேர்டு பண்ணு!’னு தன் தூரத்து தங்கையோட மகனுக்கு வேலையை உறுதிசெய்துட்டு இருந்தார் ஒருத்தர்.

‘நாம தாயில்லாப் பொண்ணாச்சேனு எல்லாம் கவலைப்படாதே. உன் டெலிவரி அப்போ சித்தி நான்  ஹெல்ப்புக்கு வர்றேன். பெயின் வந்ததும் எனக்கும் ஒரு போன் பண்ணிடு!’னு வளைகாப்பு முடிந்திருந்த ஒரு இளம் பெண்ணோட கைபிடித்துச் சொல்லிட்டிருந்தார் ஒரு பெண்மணி.

இப்படி எல்லா வகையிலும் ஒருத்தருக்கு ஒருத்தர் பலமா இருக்கக்கூடிய உறவுச் சங்கிலியை நான் தொலைத்ததை உணர வெச்சது அந்த விழா.

இப்போ என் சொந்தங்களோட கான்டாக்ட் நம்பர் எல்லாம் சேகரிக்க ஆரம்பிச்சிருக்கேன்’’
 - நீண்ட கடிதம் அனுப்பியிருந்தார் சென்னை வாசகி ஒருவர்.

இந்த அவசர உலகத்தில், பரபரப்பான வேலைச் சூழலில் சொந்தங்களை எல்லாம் அரவணைத்துச் செல்ல பலருக்கும் நேரமிருப்பதில்லை என்பதை, உறவுகளைத் தொலைப்பதற்கான காரணமாக ஏற்க முடியாது.

திருமண அழைப்பிதழ் தந்த உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குச் செல்ல முடியவில்லை, வெளியூர் பயணம், அலுவலக மீட்டிங், பிள்ளைகளின் டேர்ம் எக்ஸாம் என்று பல காரணங்கள்.

சரி,,,

ஆனால், திருமணம் முடிந்த பின்னும்கூட ஒரு வார இறுதி நாளில் அவர்கள் வீட்டுக்குச் சென்று, திருமணத்துக்கு வர இயலாத நிலையைச் சொல்லி, உறவைப் பலப்படுத்தும் வாய்ப்பை ஏன் பலரும் முன்னெடுப்பதில்லை?

அட்லீஸ்ட், ‘கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதா?! ஸாரி, வர முடியலை. நிச்சயம் அடுத்த முறை ஊருக்கு வரும்போது வீட்டுக்கு வந்து பார்க்கிறோம்!’ என்ற தொலைபேசி விசாரிப்பைக்கூட செய்வதில்லை.

 ‘அதுக்கெல்லாம் நேரமில்ல’, ‘மெட்ரோ லைஃப்ல நாங்களே பரபரனு ஓடிட்டிருக்கோம்’, ‘வேலை டென்ஷன்ல கல்யாணம் மறந்தே போச்சு’ - இவையெல்லாம் சப்பைக் காரணங்கள்.

உண்மையான காரணம், அந்த உறவைப் பேணுவதில் ஆழ்மனதில் பிடிப்பு இல்லை. ‘அப்பாவோட தாய்மாமன் பையன். இனி, இந்த சொந்தத்தை எல்லாம் கன்டின்யூ பண்ண முடியுமா? கன்டின்யூ பண்ணணுமா என்ன?’ என்று கேட்கலாம் பலர்.

இங்கு ஒரு பெரிய உண்மையைச் சொல்ல வேண்டும். சமூக வலைதளங்களில், முன் பின் தெரியாத, முகம் தெரியாத நபர்களுடன் எல்லாம் நாள் தவறாத தொடர்பில் இருப்பதும், நெதர்லாந்தில் இருக்கும் ஒரு நண்பன்/தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவதும்,

வெளிமாநிலத்தில் இருக்கும் ஒரு தமிழனுக்கு உதவி என்றதும், ‘நம்மாளு’ என்று ரத்தம் துடிக்க இணையப் புரட்சியில் இறங்குவதும், ‘ஃப்ரெண்ட் ஆஃப் ஃப்ரெண்ட்’ என்று அறிமுகமான ஒருவருடன் உயிர் நட்பு வளர்ப்பதும் என, யார் யாருடனோ இணைய முடிகிறது இந்தத் தலைமுறைக்கு. ஆனால், உறவுகளைத் தொடர முடியவில்லை என்பது எவ்வளவு முரண்?!

வேர்களை அறுத்துக்கொண்டு, கிளைகள் பரப்ப துடிக்கிற இம்மனநிலையை என்னவென்று சொல்வது?

சமூக வலைதளங்களின் வெற்றிக்கு அடிப்படை என்ன என்று தெரியுமா?! சொந்தங்கள் ஒன்றுகூடி பேசி மகிழும் வீட்டு விசேஷங்கள்தான். கல்யாணத்தில், காதுகுத்தில், சடங்கில், ஊர்த் திருவிழாவில் என அடிக்கடி உறவுகள் அனைத்தும் ஓரிடத்தில் கூடி, பேசி, சிரித்து, அழுது, கோபம்கொண்டு, விருந்து உண்டு, கலைந்து சென்ற நம் முந்தைய தலைமுறையினரின் சந்தோஷம் இந்தத் தலைமுறைக்குக் கிடைக்கவில்லை.

உறவினர் விசேஷங்களையும், ஊர்த் திருவிழாவையும் ‘மாடர்ன் வாழ்வில்’ தவிர்த்ததால் கூடி மகிழ, பேசிச் சிரிக்க வழியற்றுப் போன இந்தத் தலைமுறை, இணைய வீதியெங்கும் ஜனத்திரள் பார்க்க உற்சாகமாகிப் போனது.

யார் யாரிடமோ அறிமுகமாக, பேச, சிரிக்க, கோபம் கொள்ள, வம்பு வளர்க்க, வெளியேற என பொழுது போக்கித் திரிகிறது.

அதில் தன் சந்தோஷம் இருப்பதாக நம்புகிறது. எனவே, பிள்ளைகளை ஆபத்துகள் நிறைந்த இணைய வெளியில் இருந்து உறவு வட்டத்துக்கு மடை மாற்றுங்கள்.

அதற்கு, ‘உறவுகள் வேண்டும்’ என்ற உணர்வு முதலில் வர வேண்டும்.

‘எதுக்கு உறவு? பொறாமை, பகை, புறணி பேசுறதுன்னு, ரொம்ப வெறுத்துட்டேன்!’ என்ற அனுபவம் சிலருக்கு இருக்கலாம்.

உறவுகள் அனைத்துமே அப்படி அல்ல. அது தனி மனித குணத்தின் வெளிப்பாடு. நல்லது, தீயது எங்கும், எதிலும் உண்டு என்பது போல, உறவுகளிலும் நல்லவர்கள், தீயவர்கள், குணம் கெட்டவர்கள் இருப்பார்கள்தானே? அதற்காக ஒட்டுமொத்த உறவுகளும் வேண்டாம் என்று விலக்கத் தேவையில்லை.

‘உங்கப்பாதான் தகப்பன் ஸ்தானத்துல இருந்து என் கல்யாண வேலைகள் எல்லாம் செஞ்சாரு. நீ எங்கே இருக்க, எத்தனை பிள்ளைங்க?’ என்று கண்கள் மல்க விசாரித்து, ‘எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்!’ என்று உளமாற வாழ்த்தும் ஓர் அத்தையின் ஆசீர்வாதம், உலகின் மிகத் தூய்மையான அன்பு.

‘நல்லது கெட்டதுனா கூப்பிடுடா, ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருக்கணும்!’ என்று உரிமையும், கடமையுமாகப் பேசும் சித்தப்பாவின் பிரியத்தை, சித்தியின் சிடுசிடுப்பை சகித்துக்கொண்டாவது சுவீகரிக்கத்தான் வேண்டும்.

உங்களுக்கு ஒரு பிரச்னை எனில், உங்களுக்கு முன்பாகவே, ‘எங்க அண்ணனை பேசினது யாருடா..?’ என்று கோபம் கக்கிச் செல்லும் தம்பியுடையோனாக இருப்பதன் பலத்துக்கு இணை இல்லை.

வீடு, பேங்க் பேலன்ஸ், போர்டிகோவில் பெரிய கார், ஆடம்பர வாழ்க்கை என எல்லாம் இருந்தும், உறவுகள் இல்லை எனில், ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் அந்த பலவீனத்தை உணரத்தான் வேண்டும். ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

உறவுகளுக்கு எப்போதும் முற்றுப்புள்ளி வேண்டாம். அது ஓர் அழகிய தொடர்கதை!
உறவுகளைப் பரிசளியுங்கள்,,, அடுத்த சந்ததிக்கு!!!

குழந்தைகளை உறவினர் விழா, விசேஷங்களுக்கு, ஊர்த் திருவிழா வுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு உறவினர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்துங்கள். அவர்களுடனான உங்களின் பால்ய வயது நினைவுகளைப் யபிள்ளைகளுடன் பகிருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வில் முக்கியமானவர்கள் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள்.

‘உங்க அத்தை இருக்காளே, பொறாமை பிடிச்சவ' என்று யநெகட்டிவாக எந்த உறவுகளையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்காதீர்கள். அவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமலே விட்டுவிடலாம்.

‘உங்க அப்பா வீட்டு சொந்தம் இருக்காங்களே' என்று உறவுகள் என்றாலே உளம் வெறுக்கும் அளவுக்கு குழந்தைகளிடம் எதையும் பேசாதீர்கள்.

உங்கள் வீட்டு இளம் பிள்ளைகளையும், உறவினர் வீட்டு இளம் பிள்ளைகளையும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி, இணைய யுகத்தில் உறவைப் புதுப் பித்துக்கொள்ளவும், தொடர்ந்து செழிக்க வைக்கவும் வழி ஏற்படுத்திக் கொடுங்கள்.

மாமன் முறை என்றால் செய்ய வேண்டிய கடமைகள் என்ன, அத்தை முறை என்றால் செய்ய வேண்டிய சடங்குகள் என்ன என்பது பற்றி அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். நாளை உங்கள் மகனும், மகளும் ஒருவருக்கொருவர் அந்த முறை செய்ய வேண்டியவர்களே என்பதையும் சேர்த்துச் சொல்லி குழந்தைகளை வளர்த்தெடுங்கள்.

‘ஃப்ரெண்ட்ஸ் போதும் நமக்கு, ரிலேட்டிவ்ஸ் எல்லாம் வேணாம்’ என்று இன்று பல நகரத்துக் குடும்பங்களில் ஊறிக்கிடக்கும் மனநிலையை மாற்றுங்கள்; உறவுகள் பேணுங்கள்!!! உறவுகளைப் பரிசளியுங்கள்,,, அடுத்த சந்ததிக்கு!!!

பெண்ணின்றியும் அமையாது உலகம்!

'ஏங்க....இன்னொரு இட்லி வைச்சுக்கோங்க...'
கணவனிடம் கெஞ்சும் மகள்..
அதற்குள் அத்தையின் குரல்.
'இதோ வர்றேன் அத்தை..' பரபரவென ஓடும் மகளைக் கண்டு அதிசயிக்கின்றனர் பெற்றோர்.

பசி சற்றும் பொறுக்காத அந்த செல்லப் பெண், புகுந்த வீட்டில் காலை நேரத்து உணவை உண்ணவே இல்லை. அதை யாரும் கண்டு கொள்ளவும் இல்லை.
ஆத்மாவின் குரல்:

ஆம்... அம்மா வீட்டின் செல்லக் குழந்தைகள் தான்,
புகுந்த வீட்டின் பம்பரங்கள். இறக்கைகள் மட்டுமே இல்லை இந்த தேவதைகளுக்கு.

வேரோடு பிடுங்கிய செடி வேறோர் இடத்தில் நடப்படும் போது அந்த சூழலையும் கிரகித்துக் கொள்கிறது. புதிய சூழலை அங்கீகரித்தும், சுவீகரித்தும் கொள்கிறார்கள். ஆனால் அங்கே அவளுக்கான அங்கீகாரங்கள் வழங்கப்படுவதே இல்லை பெரும்பாலும்.

மனைவி என்ற ஆத்மாவின் குரல் யாருக்கும் கேட்பதில்லை. பின் துாங்கி முன் எழும் பத்தினியாகவே பழக்கப்படுத்தி விட்டது சமுதாயம்.

'காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே! காலமிதை தவற விட்டால் துாக்கமில்லை மகளே' என்ற கவிஞனின் கானம் காற்றில் மெல்லத் தேய்கிறது. தனக்கென எதையும் யோசிப்பதில்லை மனைவி என்ற பாத்திரம். அம்மா வீட்டில் கதாநாயகி வேடம் தான் எப்போதும்.

கணவன் வீட்டில் குண சித்திர வேடம். மனைவிக்கு என்ன செய்து விட்டோம். இது ஆண்கள் அனைவருக்குமான கேள்விகள்.

இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்கள், மனைவியை நேசிப்பவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். உங்கள் மனைவியின் பிறந்த நாள் எப்போது? பிடித்த நிறம் எது?பிடித்த புத்தகத்தின் பெயர் என்ன? இப்படி கேள்விகளை கேட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால் இதற்கெல்லாம் பெரும் பாலும் விடை தெரியாது என்பது தான் உண்மை.

சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்க நான்கு குறிப்புகள் கொடுத்தால் கூட சொல்ல முடியாது என்பதே கூடுதல் சோகம்.

இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது கடினமாய் இருந்தால் கேள்விகளைக் கேட்பவர்களாக இருங்கள். சாப்பிட்டியாமா? உடம்பு சரியில்லையா?ஏன் முகம் வாடியிருக்கு? உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வரலாமா? இப்படிக் கேள்விகளைக் கேட்டுத்தான் பாருங்களேன்.

மனைவியின் மன வலிகள் எல்லாம் மறைந்து மட்டுமல்ல; மறந்து கூட போய் விடும். உடல் வலிகள்,மன வலிகளைத் தீர்க்கும் இடமாக புகுந்த வீடும் இருக்கட்டுமே.

நீக்கமற நிறைந்திருப்பவள்:

'என் மனைவி வீட்டுக்குச் செல்வதில்லை நான்...' பெருமித தொனியில் சொன்ன அந்த மனிதரின்,
உடல் நிலை சரியில்லாத அம்மாவைக் கவனித்துக் கொண்டு இருக்கிறார் அவர்மனைவி.

உங்கள் வீட்டில் ரிமோட் யாரிடம் இருக்கும்?இது 'டிவி' ஒளிபரப்பில் கேட்கப்பட்ட கேள்வி...
'அதுவா கணவர் கிட்ட இருக்கும். அவர் இல்லாதப்ப என் மகன் கிட்ட இருக்கும்..' வெள்ளந்தி தனமாய் பதில் வருகிறது அந்தப்பெண்ணிடம்.

உடல் சார்ந்த பார்வையை விடுத்து மனம் சார்ந்த பார்வையில் பெண்களை நோக்கும் போது மட்டுமே பெண் என்பவளின் பெருமை புரியும்.

ஒரே ஒரு நாள் ஊருக்குச் சென்று விட்ட மனைவி இல்லாத வீடு எப்படி இருக்கும் என சொல்லத் தேவையில்லை. வாழ்வில் நீக்கமற நிறைந்திருப்பவள் மனைவி.அதனால் தான் ஔவைப் பாட்டி

'தாயோடு அறுசுவை போம்தந்தையோடு கல்வி போம்சேயோடு தான் பெற்ற செல்வம் போம்மாய வாழ்வு உற்றாருடன் போம்உடன் பிறப்பால் தோள் வலி போம்பொற் தாலியோடு எவையும் போம்'என்று பாடியிருக்கிறார்.

வாழ்க்கைத் துணை போன பின்னால் சகலமும் போய் விடுவதாக குறிப்பிட்டு இருப்பார்.

சமீபத்திய சர்வே ஒன்று கூட இதைத் தான் கூறுகிறது.யாதுமாகி நிற்பவள்மனைவி இழப்பிற்குப் பின்னாலான கணவனின் வாழ்நாள் இருப்புகள் குறைந்து விடுகிறதாம். காரணம் என்ன தெரியுமா? எல்லாமுமாகிப் போனவள் ஏதுமற்று போய் விடுவதால் தான்.

'நாளும் பொழுதும் நலிந்தோர்க்கில்லை. ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை' என்பது உண்மை தானே?

அதிகாலையில் இருந்து அரக்க பரக்க வேலை பார்த்து அல்லாடும் இல்லத்தரசிகள் பற்றி யாரேனும் கேட்டால் அவ வீட்டில் சும்மா தான் இருக்கா என்று வாய் கூசாமல் சொல்லமுடிகிறது பிறரிடம்.

உலகிலே அதிக சம்பளம் தரக்கூடிய பணி எது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அம்மாவின் பணி தான்.
அதற்கு ஈடு இணையே இல்லை என்பதான பதிலே மானுஷியை உலக அழகியாக ஆக்கியது.

மனைவியே தாயாக,மனைவியே தோழியாக,ஆண்களின் கோபங்களின் வடி காலாக என யாதுமாகி நிற்கிறாள்.

அம்மாவிடம் கூட கணவனை விட்டுத் தர முடியாது அவளால் ஒரு போதும்!
'குழம்பு நல்லா இல்லை...இத மனுசன் சாப்பிடுவானா' என்று எரிந்து விழும் கணவனைப் பற்றி கூறிய பக்கத்து வீட்டு பெண்மணியிடம்,

 'குழம்பு நல்லா இருக்கிறப்ப என்ன சொல்வார் உங்க கணவர்' என்ற என் கேள்விக்கு 'அது அவர் ஒண்ணும் சொல்லாம சாப்பிடறத வைச்சு கண்டு பிடிச்சுக்கலாம்' என்ற பதிலில் மவுனமானது மனது.

'அவர் சொன்னா சரியா இருக்கும்' என்ற நம்பிக்கை வார்த்தைகள், 'அவள் சொன்னா சரியாகத் தான் இருக்கும்' என்று அந்தப் பக்கமும் இடம் பெயர்வது எப்போது?

தன் துன்பத்திற்கான தீர்வைத் தரும் மனிதர்களாக கணவரை எதிர் பார்ப்பதில்லை. அப்படியாம்மா..என்று கேட்கும் கணவர்களாக இருந்தால் கூட போதும் என்பதே பெண்களின் எதிர்பார்ப்பு.

புதைந்த தனித்திறமை:

பள்ளிப் பருவத்தில் பாட்டுப் போட்டிகளில் பரிசு வாங்கிய பெண்கள், பேச்சு, ஓவியம் என சிறந்து விளங்கிய தோழிகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு தன் தனித் திறன்களை தனக்குள்ளேயே புதைத்துக் கொள்கிறார்கள்.

இந்த சமூகம் கூட அப்படித் தான் பெண்ணை வடிவமைக்கிறது. கணவனுக்கு நன்றாக சமைத்துப் போடத் தெரிந்திருத்தலே மிகச்சிறந்த இல்லத்தரசி என்றே பழக்கப் படுத்தி விட்டது.

கல்லுாரி படிக்கும் போது பட்டி மன்றம் பேசும் அக்காவை,ஒரு முறை சந்திக்க நேர்ந்தது. அறிவாற்றலும், அழகும் நிறைந்த அவளிடம் இப்பவும் 'பேச போவீங்களாக்கா' என்றதற்கு

அவள் ரகசிய குரலில் 'அவருக்கு இதெல்லாம் பிடிக்காது..வீட்டில கூட மெதுவா தான் பேசுவேன்' என்றதும்.. மனம் கனத்துப் போனது.

இந்த தேவதைகளின் கனவுகளுக்கான முடிவு காலம் பிறந்த வீட்டிலேயே முடிந்து போனதா? விதி விலக்கான ஆண்களும் இருக்கிறார்கள் என்றாலும் விதிகளோடே வாழும் பெண்களும் இருக்கிறார்கள்தானே?

பண்டிகை காலங்களில் புதுத் துணி உடுத்தி, பண்டிகை கொண்டாடும் பெண்களை எப்போது காண்பது?

'சமைக்கவே சரியாப் போயிடும்...எங்க புதுசு கட்ட' என்ற அந்தப் பெண்ணின் குரல் தானே கேட்கிறது. இந்நிலை எல்லாம் மாற வேண்டும்.

அன்பு, நம்பிக்கை, காதல் என இழைத்துக் கட்டப்பட்ட குடும்ப பந்தத்தினை மகிழ்வாக்க மனைவியின் வலுவான கரம் தேவை.ஆதலினால் காதல் செய்வீர் உங்கள் மனைவியை.

நேசிக்கப்படுதல் மட்டுமல்ல நேசித்தலுமே வாழ்வை மேலும் அழகாக்கும். பல வித கனவுகளுடன் வாழ்வில் அடியெடுத்து வைக்கும் தேவதைகளை அன்புக் கரங்களால் வலுவூட்டம் கொடுங்கள். நம்பிக்கை கொடுக்கவும், நம்பி கை கொடுக்கவும் கணவனின் கரங்கள் இருக்கட்டும்.

மனதாலும், நினைவாலும் தாயாய் இருக்கும் தேவதைகளைக் கொண்டாடுவோம். நீரின்றி மட்டுமல்ல பெண்ணின்றியும் அமையாது உலகம் 🙏🏽

துன்பம் ஏன் மனிதர்களை துரத்துகிறது?

நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது,
நாம் அவர்களிடம் கோபம் கொள்கிறோம். பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறோம்.

ஆனால்,
அது தவறான செயல்.

 நமக்கு ஒரு துன்பம் ஏற்படுகிறது என்றால்,
அதற்குக் காரணம்,
நாம் முன் செய்த வினைப்பயன்தான்.

 இப்படி தத்துவார்த்தமாக பேசுவதும் எழுதுவதும் சுலபம் .

நடைமுறையில் கடைப்பிடிக்க
எவ்வளவு பொறுமை தேவை என்பதை உணர்த்த இதோ ஒரு ஆன்மிகக் கதை:

அசோகவனத்தில் சீதை இருந்தபோது, அவளை அரக்கியர்கள் பலர் துன்பப்படுத்தினர்.

அதற்காக சீதை அவர்களிடம் கோபம் கொள்ளவில்லை.
மிகுந்த பொறுமையுடன் சகித்துக்கொண்டாள்.

தனக்கு நேரிடும் துன்பங்கள் எல்லாம், தன் வினைப்பயன் காரணமாகவே ஏற்படுகின்றன என்று உறுதியாக நம்பினாள்.

ராவண சம்ஹாரம் முடிந்த பிறகு, அசோகவனத்தில் இருந்த சீதாபிராட்டியாரிடம் விவரம் சொல்ல வந்த அனுமன்,

பிராட்டியை வணங்கி,

''தாயே, ஸ்ரீராமபிரான் வெற்றி வாகை சூடிவிட்டார். ராவணன் மாண்டான்'' என்று கூறினார்.

அனுமன் கூறியதைக் கேட்டு மகிழ்ந்த சீதை,

''அனுமனே, நான் முன்பொரு முறை உயிர் துறக்க நினைத்த நேரத்தில்,
நீ வந்து எனக்கு ஆறுதல் கூறி காப்பாற்றினாய்.

இப்போதும் ராமபிரான் பெற்ற வெற்றிச் செய்தியை நீயே வந்து எனக்குத் தெரிவித்தாய்.

ஏற்கெனவே உனக்கு நான் சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தைத் தந்துவிட்டேன்.
முன்பை விடவும் அதிகம் சந்தோஷம் தரும் செய்தியை இப்போது கொண்டு வந்திருக்கிறாய்.

உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்'' என்றார்.

அதற்கு அனுமன்,

''தாயே,
எனக்கு ஒரு வரமும் வேண்டியதில்லை. நான் விரும்புவது ஒன்றேதான்.

கடந்த பல மாதங்களாக உங்களைப் பாடாகப் படுத்திய இந்த அரக்கிகளை, நான் தீயில் இட்டுக் கொளுத்தவேண்டும். அதற்கு தாங்கள் அனுமதிக்கவேண்டும்'' என்று அனுமன் கேட்டுக்கொண்டார்.

ஆனால்,
அனுமனின் கோரிக்கையில் சீதைக்கு உடன்பாடு இல்லை.
எனவே அனுமனைப் பார்த்து, '

'அனுமனே, நீ நினைப்பதுபோல் இந்த அரக்கியர் என்னைத் துன்புறுத்தி இருந்தாலும்,
அதற்காக இவர்களை தண்டிப்பதில் எனக்கு சம்மதம் இல்லை.

நான் இப்படி துன்பம் அனுபவிப்பதற்குக் காரணம்,
நான் முன்பு செய்த செயலின் விளைவுதான்.
பொன்மானாக வந்த மாயமானுக்கு ஆசைப்பட்டு,
அதைப் பிடித்து வர என் கணவரை அனுப்பியதும்,
சென்ற கணவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராமலும்,
'லட்சுமணா, லட்சுமணா' என்று அபயக் குரல் எழுப்பியதாலும்,
பயந்து போன நான்,

எனக்குக் காவலாக இருந்த லட்சுமணனை
அனுப்பிப் பார்க்கச் சொன்னேன்.

அவர் என் கணவருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று
மறுத்துக் கூறியும்,
நான் ஏற்றுக்கொள்ளாமல் சுடுசொற்களால் லட்சுமணனைக் கண்டித்துப் பேசினேன்.

ஒரு பாவமும் அறியாமல்,
இரவும் பகலுமாக எங்களைக் கண்ணிமைபோல் காவல் காத்த லட்சுமணனின் மனம் நோகும்படி
நான் பேசியதுதான்,
இங்கே நான் அனுபவித்த துன்பத்துக்குக் காரணம்.

எனவே,
நீ அரக்கியர்களை ஒன்றும் செய்துவிடாதே.
அவர்கள் அரக்கியர்கள் என்றாலும் பெண்கள்.
அவர்களுக்குத் தீங்கு செய்து நீ பெரும் பாவத்தைத் தேடிக்கொள்ளாதே'' என்று கூறினார்.
அனுமன் உண்மையைப் புரிந்துக்கொண்டார்.

நமக்கு மற்றவர்கள் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால்,
அதற்குக் காரணம் நாம் முன் செய்த தீவினைப் பயன்தான் காரணம்.

 ".கர்ம வினைகள் நமது வாழ்க்கையின் போக்கினை தீர்மானிக்கும் பெரிய சக்தி. ஆன்மிகம் என்பதே நமது கசடுகளை நீக்கி உள்ளம் உடல் தூய்மையை உருவாக்குவது..

*சர்வம் சிவமயம்